தமிழ்நாட்டு பயணிகளுக்கு என்னாச்சு? ஒடிசாவிலிருந்து வந்த உதயநிதி சொன்னது “இதான்” - ஸ்டாலின் விளக்கம்
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் விபரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் தன்னிடம் விளக்கமளித்ததாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் நிலையை அறிந்து, அவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதைக் கண்காணிக்கவும் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரு.சிவசங்கர் ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினை ஒடிசா செல்ல உத்தரவிட்டிருந்தேன்.

அவர்கள் இரு நாட்களாக அங்குத் தங்கியிருந்து, விபத்துக்குள்ளானோர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை, பலியானோர் உடல்கள் வைக்கப்பட்டிருந்த வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஒடிசா மாநில முதலமைச்சர் அவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் நிலையை அறிந்தனர்.
இதனிடையே, மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கும், "தங்கள் உறவினரையோ நண்பரையோ தொடர்பு கொள்ள முடியவில்லை" என யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய அவர்கள் என்னைச் சந்தித்து, மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்ததோடு, இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக இதுவரை செய்திகள் வரவில்லை என்று தெரிவித்தனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும் மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விபத்தில் காயமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஒடிசா சென்றனர்.
அவர்களுடன் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக், ஆகியோர் கொண்ட குழுவும் இன்று காலை ஒடிசாவுக்கு விமானம் மூலம் சென்றடைந்தனர்.
அதிகாரிகள் குழு விபத்து நடந்த பாலசோரில் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றனர். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் குறித்து விபரம் சேகரித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்தது. அமைச்சர்கள் விபத்து நடந்த இடத்தில் உள்ள நிலவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளையும் கண்காணித்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்றே வீடியோ கால் மூலம் கள நிலவரத்தை தெரிவித்து இருந்தார். இன்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
அதேபோல் புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினர், ரயில் விபத்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள் மற்றும் விவரங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications