காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்
சென்னை: தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, "ரொம்ப நாளைக்கு முன்பே நான் போட்டியிடவில்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டேன். கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் கூட நான் சொல்லிவிட்டேன். நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை. நான் நிற்க வேண்டும் என்றால் எந்த தொகுதியிலும் நிற்கலாம். காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகிறது" என கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. அதிமுக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் தனக்கு கேட்ட தொகுதியினை அதிமுக கொடுக்கவில்லை என்பதற்காக அண்ணாமலை போட்டியிடவில்லை என்று பேசப்பட்டது. இந்த நிலையில் தான் நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை என்றும், ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறித்தும் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அண்ணாமலை கூறியதாவது:-

எனக்கு மகிழ்ச்சி தான்
ரொம்ப நாளைக்கு முன்பே நான் போட்டியிடவில்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டேன். கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் கூட நான் சொல்லிவிட்டேன். உயர் மட்ட குழுவில் இருந்து போன பட்டியலில் இருந்து கூட எனது பெயர் கிடையாது. பியூஸ் கோயலிடமும் நான் ஒருவாரத்திற்கு முன்பே தெரிவித்துவிட்டேன்.
பாஜக பொதுச்செயலாளர் எல். சந்தோஷ், தலைவர் நிதின் நபினிடமும் என்னுடைய கருத்தை நான் சொல்லியிருந்தேன். அதனால் கட்சி என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சிதான். காரணம் இந்த தேர்தலை பொறுத்தவரை எல்லோருக்கும் பணி செய்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பாஜக வேட்பாளர்கள் 27 பேர் இருக்கிறார்கள்.
எந்த தொகுதியும் கேட்கவில்லை
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். எனக்கும் 21 ஆம் தேதி முடியும் வரை வரிசையாக பிரசாரம் உள்ளது. வேட்பாளர் போட்டியில் நான் இல்லை. நான் எந்த தொகுதியும் கேட்கவில்லை. நான் நிற்க வேண்டும் என்றால் எந்த தொகுதியிலும் நிற்கலாம். எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கோவையில் சிட்டிங் எம்.எல்.ஏ இருக்கிறார் அவர் போட்டியிடுவதுதான் முறை.
மொடக்குறிச்சி தொகுதியில் நிறைய பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள். தெற்கில் எம்.ஆர் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். நான் எந்த ரேசிலும் இல்லை. எந்த தொகுதியும் கேட்கவில்லை. ஏப். 23 வரை பிரசாரம் செய்வது என்னுடைய வேலை. அதன்பிறகு மற்றதை நான் பேசுகிறேன். எல்லா சண்டையையும் ஒரே நேரத்தில் போட முடியாது. இந்த தேர்தலில் என்னுடைய சண்டை என்பது பிரசாரம் மூலமாகத்தான்.
காலம் இருக்கிறது, காட்சிகள் மாறும்
2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு சிறு வருத்தம் இருந்தது. என்னை நம்பி பல வேட்பாளர்களை போட்டியிட வைத்தோம். ஓபிஎஸ், டிடிவிக்கு பிரசாரம் அதிகம் செய்ய முடியவில்லை. காலம் இருக்கிறது. நான் நிறுத்திய வேட்பாளர்களுக்கு கூட பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அந்த மனக்குறை இருந்தது. அது இந்த தேர்தலில் நீங்கிவிடும்.
காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகிறது. நிறைய தேர்தல் வரத்தான் போகிறது. அன்னைக்கு நாம போட்டி போட்டுக்கொள்ளலாம். அன்போடு இருக்க கூடிய மக்கள் அன்போடுதான் இருப்பர்கள். இந்த தேர்தலில் சண்டை என்பது திமுகவின் தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போக வேண்டும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications