2016 வரை எடப்பாடி யார்னே யாருக்கும் தெரியாது.. கேகேஎஸ்எஸ்ஆர் கிட்ட கேளுங்க.. திருச்சி சிவா பதில்!
சென்னை: 1989ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார், அதை நான் நேரில் பார்த்தேன் என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், திமுக எம்.பி திருச்சி சிவா அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆவேசமாகப் பேசிய திமுக எம்.பி கனிமொழி, மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். அதற்கு பதில் கொடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "அன்று 1989ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்தவர்கள் திமுகவினர். இன்று திரௌபதி குறித்துப் பேசுகிறார்கள்" என விமர்சித்தார்.

இதையடுத்து, சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து யாரும் இழுக்கவில்லை என்றும், ஒத்திகை பார்த்து ஜெயலலிதா நடத்திய நாடகம் அது என்று அப்போது அவருடனிருந்த திருநாவுக்கரசரே கூறியுள்ளார் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "1989ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் கொடூரமான முறையில் தாக்குதல் நடந்தது. பெண் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது தாக்குதல் நடைபெற்றது. அந்த நிகழ்வு என் மனதில் இடம் பெற்றுள்ளது. 1989-ல் சட்டப்பேரவையில் அந்த சம்பவம் நடக்கும்போது நானும் இருந்தேன்.
அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தாக்குதல் நடந்தது. திட்டமிட்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சில கருத்துக்களை பேசியபோதுதான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. அதையொட்டிதான் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா பேச முயற்சி செய்தபோது கொடூரமான தாக்குதல் கருணாநிதி முன்னிலையிலேயே நடந்தது.
அன்றைய அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினாரக்ள். திருநாவுக்கரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் தடுத்தார்கள். அதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். தடுத்துக் கொண்டிருக்கும்போது திமுக மூத்த அமைச்சர் ஒருவர் அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க, அமைச்சர்கள் ஜெயலலிதாவின் தலைமுடியை பிடித்து இழுக்க மிகப்பெரிய கோரமான காட்சி சட்டமன்றத்தில் அரங்கேறியது.
ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமையை இன்றைய முதலமைச்சர் கொச்சைப் படுத்துகிறார். சேலையையும் முடியையும் பிடித்து இழுத்த சம்பவம் பத்திரிகையில் வந்ததனால்தான் அடுத்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டினார்கள். பொய்யான தகவலை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி திருச்சி சிவா பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, "ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை எடப்பாடி பழனிசாமி என்பவரை யாருக்குமே தெரியாது. 1989ல் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை அப்போது ஜெயலலிதா உடன் இருந்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications