தேங்காய் சிதறுது.. ஸ்டிரைட்டா திருப்பதி பெருமாள் கிட்டயே கிளம்பி போறாங்க.. விஸ்வரூபமெடுத்த "லட்டு"
சென்னை: திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்து இருப்பதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்து அமைப்புகள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய, முக்கிய முடிவுகள் சிலவற்றையும் அறிவித்திருக்கின்றன.
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்து இருப்பதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
லட்டு தயாரிப்பு: லட்டு தயாரிப்பில் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாக கூறிய கருத்தால், அரசு நிர்வாகங்களுக்கு நெருக்கடியும் கிளம்பியுள்ளது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் வலுவாக கையில் எடுத்துள்ளன.

ஆந்திரப்பிரதேச அரசு உடனடியாக வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபோல், நாட்டின் அனைத்து கோயில்களும், மடங்கள் மற்றும் புனிதத்தலங்களும் அரசின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். திருப்பதி விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்து அமைப்புகள்: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்புகளும் களம் இறங்கியிருக்கின்றன.. இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிசத் மற்றும் இந்து சமூக அமைப்புகள் உள்பட 16 அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் தற்போது நடைபெற்றது..
இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் கோவிலின் புனித தன்மையும், நம்பிக்கையும் காக்கப்படவும் பெருமாளிடமே பிரார்த்தனை செய்யவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. அத்துடன், நாளை சனிக்கிழமை, அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், கருடாழ்வார் சன்னதிகளில் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சனிக்கிழமை : அதேபோல் அடுத்த வாரம் சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சனிக்கிழமை திருமலையில் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்தவகையில், இந்த திருப்பதி விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications