இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்.. இவ்வளவு வசதிகள் இருக்குதா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் டிக்கெட் கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், நேரம் மற்றும் வசதிகள் சிறப்பாக உள்ளது. திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் குறித்து பார்ப்போம்.
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஇந்த விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஞானதிரவியம் எம்பி, திருநெல்வேலி மாநகராட்சி தலைவர் சரவணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வஹாப் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இதனிடையே இந்த ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. கால அட்டவணைபடி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்தது.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே 'வந்தே பாரத்' ரயில் வந்தது. அதை தொடர்ந்து சென்னை எழும்பூரை வந்தடைந்தது. 7.50 மணி நேரத்திலேயே சென்னைக்கு வந்து சேர்ந்தது.
இந்த ரயில் நவீன வசதியுடன் இருக்கைகள், விமானத்தில் செல்வது போல அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயிலின் வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்டரில் இருந்து 130 கிலோ மீட்டராக அதிகரிக்க தண்டவாளங்களை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணி திண்டுக்கல் முதல் திருச்சி வரை நடந்து வருகிறது. தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை ரயிலில் 130 கிமீ வேகத்தில் போக முடியும்.
திருநெல்வேலி வந்தே பாரத் வேகம்: மற்ற பகுதிகளில் 110 கிமீ வேகத்தில் தான் போக முடியும். ஒருவேளை சென்னை முதல் விருத்தாசலம் வரை நடைபெற்று வரும் பணிகள் இப்போது உடனே முடிந்தால், 7.30 மணி நேரத்திலேயே திருநெல்வேலி போய்விட முடியும். சென்னை டூ திருநெல்வேலி வரை முழுமையாக பணிகள் முடிந்தால் 7 மணி நேரத்திற்கு குறைவான நேரத்திலேயே போய் விட முடியும்.
திருநெல்வேலி வந்தே பாரத் இருக்கைகள்: இந்த வந்தே பாரத் ரயிலானது, இருக்கையில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் மட்டுமே உள்ள. அதில் 7 பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட சாதாரண இருக்கைகள் மற்றும் ஒரு பெட்டியில் எக்ஸிக்யூடிவ் அதி நவீன இருக்கைகள் என மொத்தமாக 540 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயண நேரம்: திருநெல்வேலியில் அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 1:50 மணிக்கு சென்றடையும்.மறு மார்க்கத்தில் பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணம்: இந்த ரயிலில் சென்னை டூ திருநெல்வேலி அல்லது திருநெல்வேலி டூ சென்னை செல்ல, உணவு, ஜி.எஸ்.டி., முன்பதிவு என அனைத்தும் சேர்த்து சாதாரண இருக்கை கட்டணம் ரூ.1,620 ஆகவும், எக்சிகியூடிவ் இருக்கை கார் கட்டணம் ரூ.3 ஆயிரத்து 25 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், தாம்பரம், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்தில் சென்றால் ரூ. 1000 முதல் 1200 ரூபாய் வரை பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 11 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் திருநெல்வேலிக்கே 8 மணி நேரத்திற்கு முன்பாகவே செல்லக்கூடிய ரயில் என்பதால், திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வோருக்கு போவோருக்கு மட்டுமல்ல.. அந்த வழியில் நின்று செல்லும் மாவட்டங்களில் இருந்து பயணிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வந்தே பாரத் ரயில் வசதிகள்: இந்த வந்தே ரயிலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ளன. மொபைல் சார்ஜிங் வசதி, நவீன கழிப்பறை, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிப்பறை வசதிகளும் இருக்கின்றன. ரயில் இருக்கையை 360 டிகிரியில் சுற்றி திருப்பியபடி இயற்கை காட்சிகளை ரசித்தபடி ரயிலில் பயணிக்க முடியும்.












Click it and Unblock the Notifications