கருப்பு பூஞ்சை பாதித்த தலைமை காவலர்.. மொத்த செலவையும் ஏற்ற உதயநிதி.. நெகிழ்ந்த திருவள்ளூர் எஸ்பி
சென்னை: திருவாலங்காடு காவல் நிலைய தலைமைக் காவலர் புஷ்பராஜுக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான அனைத்து செலவையும் ஏற்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி புஷ்பராஜ் நன்றி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் புஷ்பராஜ். இவர் திருவள்ளூர் மாவட்ட காவலர் குடியிருப்பில் தனது மனைவி எழிலரசி, ஒரு வயது மகன் ஜெயசந்திரனுடன் வசித்து வருகிறார்.
முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், அவருக்கு திருவாலங்காடு சந்திப்பில் பணி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பணியிலிருந்த புஷ்பராஜுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குப் பரிசோதனை செய்ததில் தலைமைக் காவலர் புஷ்பராஜுக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதியானது. இந்த செய்தி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமாருக்கு சென்றது.
சிகிச்சை
உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற வருண்குமார், புஷ்பராஜை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவரது உடல்நிலையின் தீவிரம் குறித்து உணர்ந்த வருண்குமார், புஷ்பராஜை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மருத்துவர்கள்
அங்கு புஷ்பராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு 20 லட்சம் வரை செலவாகும் என தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.
Recommended Video
உதயநிதி
இந்த தகவல் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து புஷ்பராஜை குணப்படுத்த தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி புஷ்பராஜ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மா சுப்பிரமணியன்
அங்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் புஷ்பராஜை சந்தித்து நலம் விசாரித்தனர். இது தொடர்பான புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புஷ்பராஜிடம் உதயநிதி, கவலைப்படாமல் இருங்கள், உங்கள் மருத்துவ செலவுகளை நான் ஏற்கிறேன், மீண்டும் விரைவில் பணிக்குத் திரும்பலாம் என ஆறுதல் கூறியுள்ளார்.
|
ட்விட்டர்
உதயநிதியின் இந்த செயலுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து வருண் குமார் கூறுகையில், உரிய நேரத்தில் உதவியதற்கு நன்றி. சரியான நேரத்தில் நீங்கள் செய்தது பேருதவி. சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியனும் உதவிகளை செய்தார். இருவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.