போன வாரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் தன்வந்திரி.. அடுத்த வாரம் கண்ணகி.. பூமிகாவின் காபி தான் மேட்டரே
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் காபி வாங்கி குடித்த தன்வந்திரி என்பவரிடம் கைவரிசை காட்டி உள்ளார் பூமிகா என்ற பெயர். மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து மயக்க மருந்து கலந்த காபி கொடுத்து அவர்களிடம் கைவரிசை காட்டிய இளம் பெண்ணை எழும்பூர் ரயில்வே போலீசார் திருவாரூர் சென்று அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் தன்வந்திரி என்கிற பெண் ஒருவர் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவர் அருகில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து டிப்டாப்பாக பயணித்துள்ளார். அவர் தன்வந்திரியிடம் பேச்சுக்கொடுத்து நட்பு பாராட்டி உள்ளார்.

தொடர்ந்து ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த இளம் பெண், தன்வந்திரியிடம் தனக்கு அசதியாக இருப்பதால் தேநீர் குடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார். சர்க்கரை குறைவாக இருக்கும் தேநீரை வாங்கப் போகிறேன், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு தன்வந்திரி தனக்கு காப்பி வேண்டும் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த இளம்பெண் வாங்கி வந்து காபியை தன்வந்திரிக்கு கொடுத்துள்ளார். அதை குடித்ததும் தன்வந்திரி மயக்கம் அடைந்தாராம். அதன் பிறகு எழுந்து பார்த்தபோது தனது லேப்டாப், கைப்பை மற்றும் தனக்கு அருகே இருந்த இளம்பெண் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.
இதுதொடர்பாக தன்வந்திரி சென்னை எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 17ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புறப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கண்ணகி என்ற பெண்ணுக்கும் இதேபோன்று இளம்பெண் ஒருவர் காபி வாங்கி கொடுத்துள்ளார். அதை அவர் குடித்த உடன் மயங்கியுள்ளார். அதன்பின்னர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலி மற்றும் கவரிங் நகைகளை பறித்து சென்றுள்ளார். இதுபற்றி கண்ணகியும் புகார் அளித்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளும் ஒரே பாணியில் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த எழும்பூர் ரயில்வே போலீசார், அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக விசாரித்தனர். அப்போது இரண்டு சம்பவங்கள் நடைபெற்ற ரயில் பெட்டியிலும் இருந்தும் ஒரே இளம்பெண் இறங்கிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தார்கள்.
இதையடுத்து, பயணியின் பி.என்.ஆர் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பெண் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த 23 வயதான பூமிகா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது, ரயிலில் இரண்டு பெண் பயணிகள் தவறவிட்ட அனைத்து பொருட்களும் அங்கே இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார், பூமிகாவையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications