"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்!
சென்னை: தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜு சாக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். "பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா இடம்பெற்றுள்ளது. சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமாகா-வுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்தார் ஜிகே வாசன். இதையடுத்து, தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஈரோடு மேற்கு ஆகிய 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது.

இந்த 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகிவிட்டதை அடுத்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளர்களை நாளை காலை அறிவிக்க உள்ளார். இந்த தேர்தலில் ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 5 தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு சவாலாகவே அமைந்துள்ளது. இந்த தொகுதிகள் எல்லாம் திமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிற தொகுதிகள். அதுவும் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளில் தற்போதைய திமுக அமைச்சர்கள் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜு சாக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
"5 இடங்களில் ஒரு இடத்தில் கூட தமாகா ஜெயிக்காது. சென்னை மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் சீட்டை கூட ஜிகே வாசனால் கேட்டு வாங்க முடியவில்லை. பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தாமரை சின்னத்தில் நின்றுவிட்டு நாளை உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் எப்படி சீட் வாங்குவீர்கள்" என செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications