இயற்கை வேளாண்மை... இளைஞர்களை கவர சிறப்புத்திட்டங்கள் - முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
சென்னை: கோயம்புத்தூரில் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் கவர்வதற்காக பல முக்கிய திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த வேளாண் பட்ஜெட் காணிக்கையாக்கப்படுவதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதில் தோட்டக்கலைத்துறை, இயற்கை விவசாயம், மூலிகை பொருட்கள், மாடித்தோட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் விவசாயத்தில் ஈடுபடும் வகையில் சிறப்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

வேளாண்மை மற்றும் சார்புத்துறைக்கு நிதி
2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.1,245.45 கோடி திட்டம்
ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" அறிமுகம். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நெல் விவசாயிகளின் நலன்
நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்காகும் கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி, ஆக மொத்தம் ரூ.319.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடி மட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ. 119.402 கோடி ஒதுக்கீடு

ரூ. 982.48 கோடி நிதி
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம், காய்கறி விதைத் தளைகள் விநியோகத்திற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து வழங்கி,1,50,000 ஹெக்டரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய சக்தி பம்புசெட்
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 லட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.

இயற்கை வேளாண்மை ஆராய்ச்சிப்பணி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை 'நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்' என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி.

மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்
மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும். பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்.

இளைஞர்களுக்கு விவசாயம்
வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும். நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம். தேவையில்லாமல் பனை மரத்தினை வெட்டும் நடைமுறை நெறிமுறைப்படுத்தப்படும்.

கரும்புக்கு ஊக்கத் தொகை
நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் "சிறப்பு ஊக்கத்தொகையாக" டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி

வேளாண் உபகரணங்கள் தொகுப்பு
மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய "வேளாண் உபகரணங்கள் தொகுப்பு" அரை லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசளிக்கப்படும். வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு அமைப்பு.

தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய இரண்டு இலட்சம் ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், கடலூர், நாமக்கல், தென்காசி மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன வேளாண் இயந்திரங்கள்
கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் துவக்கப்படும். கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு. குறைந்த வாடகையில் இயந்திரங்களை வழங்கும் திட்டத்தினை, வலுப்படுத்துவதற்காக, ரூ. 23.29 கோடியில் நவீன வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்,
மழை நீரினை சேமித்து, பயிர் உற்பத்தியை பெருக்க விவசாயிகளின் வயல்களிலேயே 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உழவர் சந்தைகள் புனரமைப்பு
மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, ரூ.10,000 /- வீதம் 1,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள 50 உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.12.50 கோடி, புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை.

பதப்படுத்தும் மையம்
ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருளை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் செய்து தருவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு. ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை பகுதியில் பழங்குடி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மிளகினை பதப்படுத்தி சேமித்து வைக்க பரிவர்த்தனைக்கூடம், உலர்களத்துடன் கூடிய பதப்படுத்தும் மையம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராம வேளாண் சந்தை வளாகம்
நீலகிரி, எடப்பள்ளி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்.
கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.3.5 கோடி மதிப்பில் 28 உலர்கலங்கள் அமைக்கப்படும்.

வேளாண் ஏற்றுமதி சேவை மையம்
விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை, கிண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும். முதன்முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் APEDA தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவிகித மானியம் அமைக்கப்பட்டுள்ளது.

சேமிப்புக் கிடங்கு
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக்கூடம், கூட்டரங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் 'முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் முருங்கைக்கென சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திகள் (Driers), இலைகளை பொடியாக்கும் இயந்திரங்கள் (Pulveriser), தானியங்கி சிப்பம் கட்டும் இயந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன விற்பனை மையம்
சென்னை மாநகராட்சியில் கொளத்தூர் பகுதியில் விளைபொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம் துவங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஏலம் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருளுக்கு உரிய விலை பெற இணையதளம் மற்றும் சிறப்பு மென்பொருளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மண்ணச்ச நல்லூர் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை

மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம்
உணவுப்பதப்படுத்துதலுக்கு தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக, உணவுப் பதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு. மீன் பதப்படுத்துதலுக்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர், வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு தொழில்கற்கும் மையங்கள் அமைக்கப்படும். ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என ஐந்து தொழில்களுக்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதியதாக துவங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

தொழில் முனைப்பு மையம்
தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம்
வேளாண்மையில், தொழில் முனைவோர்களை ஈர்க்க, வேளாண் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre) வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் (Agri incubation Centre). காவேரி டெல்டா வேளாண் பெருமக்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக, திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
தமிழக சட்டசபையில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டும் காகிதமில்லாத இபட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கும், தோட்டக்கலைத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களையும், பெண்களையும் விவசாயப்பணியில் ஈடுபடச்செய்யும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications