மதுரை மல்லி.. ரோஜா சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள்.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
சென்னை: மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். சட்டசபையில் இன்று (மார்ச் 15) 2025-26ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள். உழவர்களின் வாழ்க்கையில் வேளாண் பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் என நம்புகிறேன். மக்காச்சோளம், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 336 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண் சாகுபடி 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். நெல், பருத்தி சாகுபடியை அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம், சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழக சிறுதானிய இயக்கம். உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் ஆகியவை தொடங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்கிட ரூ.8.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஆயிரம் ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications