காவிரி, கல்லணை.. 2,925 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள்.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
சென்னை: காவேரி, கல்லணை கால்வாய் பாசனப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் ரூ.13.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க, பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால், மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல, வறட்சி காலங்களில் கால்வாய் மூலமாக நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.
ரூ.68 கோடியில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நீர்வடிப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் உள்ள "சி" மற்றும் "டி" பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் ரூ.13.80 கோடி மதிப்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.50 கோடியில் திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும். மேலும், ரூ.2.75 கோடியில், வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை" உருவாக்கப்படும். டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும்.மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications