தமிழக சட்டசபைக் கூட்டம் ஜன.5ல் ஆளுநர் உரையுடன் தொடக்கம் - கலைவாணர் அரங்கில் நடக்கிறது
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் வரும் 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.
சென்னை: ஆளுநர் உரையுடன் வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபைக் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கலைவாணர் அரங்கில் சட்டசபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு 2020ஆண்டு மார்ச் மாதம் வரை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தை நடத்தினார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று அதிகம் பரவத் தொடங்கியதை அடுத்து தனி மனித இடைவெளியை அதிகரிக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வந்த சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகு 2020 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரை, அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்தில் தான் நடத்தப்பட்டது.

மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகும் கலைவாணர் அரங்கத்தில் தான் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்வு, கவர்னர் உரை, மானிய கோரிக்கை மீதான விவாதமும் கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் தான் நடத்தப்பட்டது.
தற்போது கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துவிட்டதால் இனிமேல் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவதற்கு பதிலாக பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய சட்டமன்றத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கோட்டையில் உள்ள சட்டசபையை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்றன. அங்குள்ள பேரவை மண்டபத்துக்கு பெயிண்ட் அடிப்பது, மேஜை, நாற்காலிகளை சுத்தம் செய்வது, வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது போல் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலும் கம்ப்யூட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் சட்டசபைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைவாணர் அரங்கில் கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய பேரவை மண்டப அமைப்பு அப்படியே உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் வரும் 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications