2 தொகுதிகளில் ‘ஈ’போல மொய்க்கும் லெட்டர் பேட் கட்சிகள்? - இது சென்னையா? கட்சிகளின் பண்ணையா?
சென்னை: வேறு எங்கும் இல்லாத வகையில் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளில் மட்டும் உதிரி கட்சிகளின் வேட்பாளர்களால் களம் நிரம்பி வழிகிறது. தேர்தல் களத்தில் போட்டியிடும் கட்சிகளின் இலக்கு வெற்றியாகவே இருக்க முடியும். எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறப் போகிறது எனப் பலரும் ஆர்வமாக உற்றுநோக்கி வருகின்றனர். மும்முனை போட்டி என்ற நிலை மாறி 4 முனைப் போட்டியாகத் தேர்தல் களம் மாறியுள்ளது.
பெரிய கட்சியான திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைத் தவிர்த்து விசிக, பாமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைத் தாண்டி ஐஜேகே, தமிழக வாழ்வுரிமை கட்சி, முக்குலத்தோர் புலிப்படை எனப் பல கட்சிகள் களத்தில் உள்ளன.

இந்தக் கட்சிகளைத் தாண்டி நடிகர் விஜய் இந்தத் தேர்தலில் ஒரு மாற்றுச் சக்தியாக இருப்பார் என்று கணிக்கக் கூடிய அளவுக்கு அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தமிழகம் முழுக்க பரவலான ஒரு வரவேற்பு உள்ளதைக் காண முடிகிறது. இளம் தலைமுறை மத்தியில் அவர் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் வாக்கு செலுத்தக்கூடிய வயது வரம்பு வராத சிறுவர்களிடம் கூட அவரது தவெக போய்ச் சேர்ந்துள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் இரண்டு ஸ்டார் தொகுதிகளில் லெட்டர் பேட் கட்சிகளான பல கட்சிகள் ஈ மொய்ப்பதைப் போல வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தியுள்ளனர். அது எந்தத் தொகுதி என்கிறீர்களா? வேறு எங்கும் இல்லை. சென்னையில்தான் இந்த டம்மி கட்சிகளின் ஆதிக்கத்தால் நிரம்பி வழிகிறது இரண்டு தொகுதிகள்.
ஒன்று விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வாய்க்குள் நுழையாத பெயர்களைக் கொண்ட கட்சியின் வேட்பாளர்கள் களம் புகுந்துள்ளனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இந்தக் கட்சிகள் ஈ மாதிரி குவிந்துள்ளன.
கொளத்தூரில் ரிபப்ளிக்கன் பார்டி ஆஃப் இண்டியா ( அத்வாலே) கட்சி சார்பில் சையத் யூசுப் என்பவர் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுபாஷினி என்பவர் களம் காணுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சௌந்தர பாண்டியனும் போட்டியில் உள்ளார். ராஷ்ட்ரீய பகுஜன் பார்டி சார்பில் தேவராஜனின் மனு நிராகரிக்கப்பட்டதால் வேட்பாளர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஊர்மிளாவும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சிவஞானம் என்ற முதியவர் ஒருவரும் களத்தில் உள்ளனர். சமதா பார்டி என்ற கட்சியின் வேட்பாளரும் மக்கள் நல்வாழ்வு கட்சி, விரோ கே விர் இண்டியன் பார்டி, வீரத் தியாகி விசுவநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி எனப் பல உதிரி கட்சிகள் களம் கண்டுள்ளன.
இதில் சில கட்சிகள் உண்மையான மக்கள் சேவைக்காகத் தன்னை அடையாளப்படுத்த வேண்டிப் போட்டியிடுகின்றன. வேறு சில கட்சிகள் வெறுமனே பேர அரசியலில் ஈடுபடுவதற்காகவே போட்டியிடுகின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்தத் தேர்தல் காலங்களில் இப்படி ஒரு மறைமுக பேர அரசியலை நடத்துகின்றனர் என்றும் புகார்கள் ஒலிக்கின்றன.
இந்தப் போட்டி பட்டியலில் உள்ள பல உதிரி கட்சிகளின் வேட்பாளர்கள் களத்திலேயே காணோம். ஒரு சிலர் ஏதோ ஒப்புக்குப் பிரச்சாரம் செய்கின்றனர். அதுவும் சுனாமி போல வீசும் இந்த அரசியல் கடலுக்கு அவர்கள் கடுகை விடச் சிறுத்துக் காணப்படுகின்றன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் சில கட்சிகள் களம் கண்டன. அவர்களை யாரும் மக்கள் ஏற்கவில்லை. அப்படி இருந்தும் இந்தக் கதை தொடர்கிறது.
கொளத்தூரில் இந்த உதிரி கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமல்லாது சுயேச்சை வேட்பாளர்கள் நிரம்பி வழிகின்றனர். பெரம்பூரில் தமிழ் தெலுங்கு தேசிய கட்சி, அத்வாலேவின் ரிபப்ளிக்கன் பர்டி ஆஃப் இண்டியா, ஆல் இண்டியா ஜனநாயக மக்கள் கழகம், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, மக்களாட்சி கட்சி, மக்கள் நலவாழ்வு கட்சி, வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி, மக்கள் முரசு கட்சி, சோஷியல் யுனிட்டி செண்டர் ஆப் இண்டியா ( கம்யூனிஸ்ட்) , தக்கம் கட்சி எனப் பட்டியல் பெருத்துள்ளது. கூடவே சுயேச்சைகளின் ஆதிக்கமும் நிரம்பி வழிகிறது.
சிலர் பெரிய கட்சிகள் மத்தியில் தான் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகப் போட்டியிடுகின்றனர். உள்ளூரில் தனக்கு ஒரு அரசியல் செல்வாக்கு வேண்டி சிலர் நிற்கின்றனர். சிலர் பினாமியாகப் பெரிய கட்சிக்கு வேலை செய்வதற்காகச் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.
அதே சமயம் சில உதிரிகள் இதை வைத்து ஒரு லெட்டர் பேட் கட்சியாக வலம் வருவதற்கான அதிகாரத்தைப் பெற வேண்டியும் போட்டியில் களம் காணுகின்றனர். இதில் வேதனை என்னவென்றால், இதில் பலர் டெபாசிட் தொகையைக்கூட மீட்க முடியாது. அந்தத் தொகையைச் செலவு செய்து போட்டியிடும் இந்த உதிரி கட்சி வேட்பாளர்களைப் பார்த்தால் அந்தத் தொகையே கட்டுவதற்குச் சக்தி கொண்டவர்கள்போல் தெரியவில்லை. இந்த அதிகாரப் போட்டியில் பரிதாப வேட்பாளர்களாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் காட்சி தருகின்றனர் என்பதுதான் வேதனை.
- கடற்கரய்












Click it and Unblock the Notifications