ஒவ்வொரு தொகுதியிலும்... அம்மா, மனைவி, சித்தி, மகள், மகன், பேத்தி.. குடும்பமாக வாக்கு சேகரிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் கடந்த காலங்களை விட பல தொகுதிகளில் இந்த முறை குடும்பம் குடும்பமாக கொளுத்தும் வெயிலில் வேட்பாளர்களின் குடும்பத்தினர் பிரசாரம் செய்வதை பல இடங்களில் காண முடிகிறது.
தேர்தல் களத்தில் தங்கள் வீட்டு குழந்தைகள், பிள்ளைகளை அழைத்து சென்றால் ஒரு சென்டிமெண்ட் வரும் என்பது வேட்பாளர்களின் எதிர்பார்ப்பு. கடந்த சட்டசபை தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கர், மகளுடன் சென்று பிரசாரம் செய்தது கவனத்தை ஈர்த்தது.

விஜயபாஸ்கர்- உதயகுமார்
இந்த முறையும் விஜயபாஸ்கர் மகளுடன் சூறவாளி பிரசாரம் செய்து வருகிறார். அதேபோல் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர். உதயகுமாரின் மகள் பிரியதர்ஷிணியும் திறந்த வேனில் தீவிர பிரசாரம் செய்கிறார். இதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

ராஜன்செல்லப்பா- ஐ. பெரியசாமி
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பாவின் 10 வயது பேத்தி அந்த தொகுதியில் கலக்கல் பிரசாரம் செய்து வருகிறார். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக வேட்பாளருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா, அப்பாவுக்காக வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளார்.

பழனி அமர்க்களம்
பழனி தொகுதியில் திமுக வேட்பாளரான ஐ.பி. செந்தில்குமாரின் மகன் பள்ளி சிறுவனான ஆதவன், கறுப்பு சிவப்பு துண்டுடன் இருகரம் கூப்பி அப்பாவுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோவில், மசூதி என அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சுறுசுறுவென பிரசாரம் செய்வது அனைவரையும் கவர்ந்துள்ளது.

வேடசந்தூர் அதிமுக- திமுக வேட்பாளர்
அதேபோல் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்தின் தாயார், சித்தி, சித்தப்பா, தம்பிகள் என அனைவரும் களத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். காந்திராஜனின் மனைவி உள்ளிட்டோர் உதயசூரியன் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளனர். இப்படி குடும்பம் குடும்பமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது வாக்காளர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications