குடும்பத்தோடு வந்து வாக்களித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி!
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குடும்பத்துடன் வருகை தந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள், பேரனுடன் வந்து முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரியில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலின், அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார். மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பநிதி ஆகியோரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் வாக்களிக்கும் மையம் என்பதால் வாக்குச்சாவடி அருகே பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-
"நான் எப்படி வாக்களித்தேனோ அதுபோல அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழக மக்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு வெல்லும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications