போக்கிடம் தெரியாமல்.. திமுகவுக்குத் தூது விட்ட தேமுதிக.. "கதவை மூடு".. படாரென சொன்ன பி.கே.!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக எந்த அணிக்கு தாவுவது என தெரியாமல் திமுகவுக்கு தூதுவிட்டதாம். ஆனால் திமுகவோ எந்த சிக்னலையும் தரவில்லையாம்.
கடந்த கால சட்டசபை தேர்தல்களில் அதிமுக- திமுக இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய ஒரே கட்சியாக தேமுதிக திகழ்ந்தது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என அத்தனையிலும் இதே பாணியையே தேமுதிக கடைபிடித்தது.

தேமுதிகவுக்கு 2% வாக்குகள்
மறைந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே தேமுதிகவுக்கு காத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் இப்போது வெறும் 2% வாக்கு சதவீதம் உள்ள ஒரு கட்சியாகத்தான் தேமுதிக இருக்கிறது. அதனால் எந்த கூட்டணியும் தேமுதிகவை விரும்புவதில்லை.

விலகிய தேமுதிக
இதனாலேயே அதிமுக அணியில் 13 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என கறாராக சொல்லிவிட்டனர். ஆனால் தாங்கள் இன்னமும் வலிமையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு 25 தொகுதிகள் வேண்டும் என அடம்பிடித்தது தேமுதிக. இதை திட்டவட்டமாக அதிமுக நிராகரித்துவிட இப்போது கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டது தேமுதிக.

திமுகவுக்கு தூது
இதனைத் தொடர்ந்து எந்த கூட்டணிக்குப் போவது என்பது தெரியாமல் நடுவழியில் நின்று கொண்டிருக்கிறது தேமுதிக. ஒருகட்டத்தில் திமுகவுக்கும் தூதுவிட்டுப் பார்த்திருக்கிறது விஜயகாந்த் குடும்பம். திமுக அணியில் நீண்டகால கூட்டணி கட்சிகளுக்கே தலா 6 தொகுதிகள் பார்முலா கடைபிடிக்கப்படுகிறது.

கதவை மூட சொன்ன பிகே
தேமுதிக போனாலும் கூட அந்த ரேஞ்சில்தான் சீட்டுகள் கிடைக்குமே தவிர அக்கட்சி கனவு காண்பதைப் போல எல்லாம் அம்மஞ்சல்லியும் தேறாது. மேலும் 2% வாக்குகளை கொண்ட தேமுதிகவுக்கு சீட்டுகளைக் கொடுத்து நீண்டகால கூட்டணி கட்சிகளை பகைத்து கொள்ளக் கூடாது என ஐபேக் பிரசாந்த் கிஷோரும் ஏற்கனவே கதவை மூட சொல்லியிருந்தாராம்.

தவம் கிடக்கும் தேமுதிக
இதனால் தூதுவிட்ட தேமுதிகவுக்கு ஒருவார்த்தை கூட பதிலே தராமல் மவுனமாகிவிட்டதாம் திமுக தலைமை. அப்புறம் என்ன ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தமடம் என்கிற கதையாக கமல்ஹாசனையும் தினகரனையும் நோக்கி தவம் கிடக்கிற பரிதாப நிலைக்கு போய்விட்டது மாஜி பிரதான எதிர்க்கட்சி தேமுதிக.












Click it and Unblock the Notifications