"ரிசல்ட்".. மே 2 வேண்டாம்.. இப்பவே ஓட்டுக்களை எண்ணுங்க.. அரசு வேண்டும்.. மக்கள் கோரிக்கை!
வாக்குகளை உடனடியாக எண்ணும்படி கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது
சென்னை: தமிழகத்தில் மக்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.. உடனடியாக நடந்து முடிந்த தேர்தலின் பதிவான வாக்குகளை எண்ண சொல்லுகிறார்கள்.!
கடந்த 6-,ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது... அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இப்படி ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தபோதே, பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.. 6ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு ஒரு மாசம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.
இதான் சீமான்.. ஆயிரம் சொல்லுங்க.. "ஒத்த" வார்த்தை.. மனசை அசால்ட்டாக அள்ளி.. உற்சாகத்தில் தம்பிகள்!
வதந்திகள்
பலவாறாக ஐயமும், வதந்தியும் பரவி வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, டிவியில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒரு மாதம் கழித்து தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது, ஒரு மாநில தேர்தல் முடிவு பிறமாநில தேர்தலை பாதிக்காமல் இருக்கவே 5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது" என்றும் விளக்கம் தந்திருந்தார்.
வாக்குப்பெட்டிகள்
ஆனாலும், ஒரு மாசம் கேப் என்பது மிகப்பெரிய இடைவெளியாகவே கருதப்படுகிறது.. இப்போது வாக்கு பெட்டிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. சிசிடிவி கேமரா முன்பாக இரவும் பகலும் வேட்பாளர்கள் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றனர். வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ரூம்களில் பதிவாகும் வீடியோ காட்சிகளை அந்தந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் ஸ்கிரீனில் வேட்பாளர் கண்காணிக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
ஸ்கூட்டர்
அடுத்தக்கட்டமாக, வாக்குப் பெட்டிகளை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமிராவின் அன்றாட பதிவுகளை வேட்பாளர்களின் செல்போனுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.. இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், டூவீலரில் சென்ற ஓட்டு மிஷின்களால், வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடக்க போகிறது என்பது வேறு விஷயம்.
பாதுகாப்பு
ஆனால், இதெல்லாம் தேவையா? அப்படி என்ன அவசியம்? என்பதே மக்களின் ஒரே வாதமாக இருக்கிறது. முன்பெல்லாம் வாக்கு சீட்டு முறைப்படிதான் தேர்தல் நடந்தது.. அதுவும் ஒரே கட்டமாக நடக்கும்.. பெட்டிகளை கொண்டு போய் பாதுகாப்பாக சேர்த்த, மறுநாளே ரிசல்ட் வந்துவிடும்.. அதாவது தேர்தல் நடந்து முடிந்து ஒருநாள்தான் இடைவெளி இருக்கும், 2வது நாளே வாக்குகள் எண்ணப்பட்டுவிடும்.. அதுகூட, மதியானமே ரிசல்ட்கள் ஓரளவு தெரிய ஆரம்பித்துவிடும்.
எலக்ட்ரானிக்
இப்போது அப்படி இல்லை.. டிஜிட்டல் இந்தியாவில், வாக்கு சீட்டு முறை போய் எலக்ட்ரானிக் முறை வந்தும், ஒரு மாதம் இடைவெளி என்பது விநோதமாக கருதப்படுகிறது.. அதைவிட முக்கியம், வாக்குகளை உடனடியாக எண்ண வேண்டும் என்று தமிழக மக்கள் மட்டுமல்ல, கேரளா உட்பட இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதோ, அப்போதே காபந்து அரசு உருவாகிவிடுகிறது.. முக்கிய முடிவுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுக்க முடியாது.. அரசுதான் இயங்கும்.. அரசு சார்பில்தான் அனைத்தும் செயல்படும். அல்லது ஆளுநர் மேற்பார்வையில் நடக்கும்.
சிக்கல்
இப்போது நமக்கு முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது.. தொற்று ஒரு பக்கம், நம்மை உலுக்கி எடுத்து வருகிறது.. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் முக்கிய முடிவுகளை உடனே எடுக்கவும் முடியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தால் உடனுக்குடன் எதையும் செய்ய முடியும். அதிகாரிகளுக்கும் எளிதாக இருக்கும். இப்போது ஏதாவது தேவை என்றால் கூட யார் போய்க் கேட்பது, யாரிடம் கேட்பது என்ற பெரும் குழப்பம் நிலவுகிறது. எனவே உடனடியாக வாக்குகளை எண்ண வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமும் அதிகரித்து வருகிறது.. கோரிக்கை நிறைவேறுமா? பார்ப்போம்..!