தமிழ்நாடு சட்டமன்றம் - 10 மசோதாக்களும் மொத்தமாக நிறைவேறியது.. மீண்டும் கவர்னருக்கே அனுப்ப முடிவு..!
சென்னை: "சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்புவது மக்கள் விரோதமானது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.. இதையடுத்து, பல்வேறு காரசார விவாதத்திற்கு பிறகு, சட்டசபையில் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கே மீண்டும் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே, அவருக்கும் தமிழக அரசுக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி கொண்டிருக்கிறது..

ஒப்புதல்: திமுக ஆட்சியில், ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போது, பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முக்கிய மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இப்படி அனுப்பி வைக்கும் மசோதாக்களில் சுமார் 20 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் வந்தார். அதில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு விட்டார். எனவே, கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் குறித்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டும் அறிவுறுத்தியது.
ஆளுநர் ரவி : இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, அவசரம் அவசரமாக ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார்.. இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக ஆலோசனையிலும் இறங்கியது..
மறுபடியும் ஒரு சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி, இந்த மசோதாக்களை எல்லாம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதன்படியே, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு சொல்லும்போது, "ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும்" என்று அறிவித்தார்.
தமிழக சட்டசபை: ஆனால், இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், பாஜக பங்கேற்காது என்ற தகவல் வெளியானாலும், நாங்கள் நிச்சயம் சட்டசபையில் பங்கேற்போம் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அதன்படியே பாஜக பங்கேற்றது.
இன்றையதினம், ஒவ்வொரு மசோதாவையும் சபாநாயகர் அப்பாவு, மெஜாரிட்டி அடிப்படையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற கோருவார்.. அதன்படியே, 10 மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என்றும், 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததுமே, சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
சரியாக 10 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டம் துவங்கியது.. அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட சோதாக்களை, மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இறுதியில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான முதலமைச்சரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறப்பட்டது. சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 10 சட்டமுன்வடிவுகளும் மறுஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications