மததுவேஷம்.. தி.க.வின் திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்
சென்னை: திராவிடர் கழகத்தின் திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாடு நடந்தால் தமிழகத்தில் மததுவேஷம் பரப்பப்படும்; ஆகையால் திராவிடர் கழகத்தின் திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில் கடந்த வாரம் சனாதன எதிர்ப்பு- திராவிடர் மாடல் விளக்கம் திறந்தவெளி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் தி.க.தலைவர் கி. வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். ஆனால் கனமழையால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
திருவாரூரில் செப்டம்பர் 4-ந் தேதி மீண்டும் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இம்மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: திருவாரூரில் செப்டம்பர் 4 அன்று சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்த போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.சனாதனம் என்பது ஹிந்து மதத்தையே குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதாவது ஹிந்து மதத்தையும், ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்து கடவுள்களையும் இழித்தும்,பழித்தும், பேசுவதற்காகவே இந்த மாநாடு என்பதும் இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க போவதாகவும் சொல்லப்படுகிறது.
"தமிழகத்தில் மத மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இனியும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க முடியாது.அப்படி முயலுவோர் சட்டத்தின் படி தண்டனையை அனுபவிக்கும் சூழலை இந்த அரசு உருவாக்கும்" என்று கடந்த மே மாதம் 10ம் தேதியன்று @CMOTamilnadu அவர்கள் தமிழக சட்டசபையில் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியது போல், வரும் 4ம் தேதி, திருவாரூரில் மத துவேஷத்தை பரப்பி,மத மோதல்களை உருவாக்க திராவிடர் கழகம் மற்றும் சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெளிவாக தெரிகிறது. சட்டசபையில் முதல்வர் @mkstalin சூளுரைத்தது போல்,மத உணர்வுகளை புண்படுத்த முற்படும் ஹிந்து மத எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். தமிழக காவல்துறை இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications