மருதமலை முருகன் கோவிலும் திமுகவும்.. நான் “தெளிவாகத்தானே” பேசியிருக்கிறேன்.. அண்ணாமலை விளக்கம்!
சென்னை: மருதமலை முருகன் கோவில், திமுக தொடர்பாக தாம் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேசியதாவது: 1962-ம் ஆண்டு மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரண்ட் கிடையாது. சாதாரண படிக்கட்டில் ஏறனும். திமுக, மருதமலை முருகனுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தது. அதை உடைத்து மருதமலை கோவிலுக்கு மின்சாரத்தை கொடுத்தது யாருன்னா சின்னப்ப தேவர். அவரே போய், முருகப் பெருமானுக்கு கரண்ட் ரெஜிஸ்டிரேசன் பீஸ் கட்டி, எம்ஜிஆரை பார்த்து மருதமலை முருகன் கோவிலுக்கு கரண்ட்டை தொடங்கி வைத்தார். திமுக எப்போதும் சனாதன தர்மத்துக்கும் இந்து தர்மத்துக்கும் எதிரானது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அண்ணாமலை பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டுதான் திமுக ஆட்சிக்கு வந்தது; 1962-ம் ஆண்டு மருதமலை முருகனுக்கு மின்சாரம் கொடுக்காததற்கு திமுக எப்படி காரணமாக இருக்க முடியும்? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. திமுக தரப்பில் அண்ணாமலைக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் மருதமலை முருகன் கோவிலில் பதிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகம் தொடர்பான கல்வெட்டு படங்களும் பகிரப்பட்டன.

தற்போது தமது பேச்சு குறித்து எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்துள்ளார் அண்ணாமலை. அதில், Generally i don't respond to garbage, but have decided to make an exception today & clean it up for once. திமுக விதித்திருந்த கட்டுப்பாட்டை மீறி, ஐயா சின்னப்ப தேவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று புரட்சித் தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்கள் மருதமலை முருகன் கோவிலில் வழங்கப்பட்ட மின்சாரத்தை துவக்கி வைக்க சென்றிருந்தார் என்று தெளிவாக பேசியுள்ளேன். வரலாற்றை மறைப்பதும் வரலாற்றை திரித்து பேசுவதும் திமுகாவுக்கும் அவர்களின் குடும்ப ஊடக நிறுவனங்களுக்கும் புதிதல்ல என சுட்டிக்காட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications