கச்சத்தீவு ஆலயத்துக்கு செல்ல தமிழர்களுக்கு இலவச விசா தர இலங்கையிடம் வலியுறுத்தினோம்:அண்ணாமலை
சென்னை: கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை அரசு இலவச விசா வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
இலங்கை பயணம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை இன்று கூறியதாவது: இலங்கையில் தமிழ் சொந்தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று தம்ழி சொந்தங்களை சந்தித்து பேசியிருந்தார். அப்போது இந்திய அரசு சார்பில் கூடுதலாக 10,000 வீடுகள் கட்டித் தந்தார். இந்திய அரசு சார்பில் அங்கே வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கட்டித் தரும் 14,000 வீடுகள்தான் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் முதல் சொத்து. இவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எஸ்டேட் வேலைகளுக்காக சென்றவர்கள். அங்கே இந்திய அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் பிரதமர் மோடியின் படத்தைப் பார்க்கிற போது நெகிழ்வாக இருந்தது.

உலகத்திலேயே எங்கேயும் வாய்ப்பே இல்லை
இதன்பின்னர் யாழ்ப்பாணம் சென்று தமிழ் சொந்தங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினரை சந்தித்து பேசினேன். யாழ்ப்ப்பாணத்தில் தமிழர்களுக்காக பிரதமர் மோடி 5 ஆண்டுகளாக செய்திருக்கும் சாதனை உலகத்துல எங்கேயுமே அப்படி ஒரு வேலை நடந்திருக்க வாய்ப்பே இல்லை. யாழ்ப்பாணத்தில் 12 மில்லியன் டாலர் அமெரிக்க பணத்தில் 11 அடுக்குமாடிகளைக் கொண்ட யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தை நமது இந்திய நாடு யாழ்ப்பாண மக்களுக்காக கட்டி பிரதமர் மோடி, இ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கு தமிழர்கள் வந்து செல்ல பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இதனைத் தாண்டி தூத்துக்குடி, காரைக்காலில் இருந்து கப்பல் மூலமாக போக்குவரத்து மேற்கொள்ள காங்கேசன் துறை என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றை இந்தியா கட்டிக் கொண்டிருக்கிறது. 45.2 மில்லியன் அமெரிக்க டாலரில் இந்த பணிகள் நடைபெறுகிறது.

இந்தியா செய்வது ஏராளம்..
இலங்கையில் திருக்கேதீஸ்வரம் எனும் பழமையான சிவன் கோவில் உள்ளது. இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலை புனரமைப்பதற்காக 300 மில்லியன் இலங்கை பணத்தை நமது பிரதமர் மோடி கொடுத்துள்ளார். ஜூலை 6-ந் தேதி அந்த கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள தமிழ் சொந்தங்களுக்காக செய்திருக்கும் செயல்கள் ஏராளம். இது தமிழ் மக்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கைக்கு கடனுதவி
இதனைத் தாண்டி இலங்கையில் 2 மாதங்களாக பொருளாதார நெருக்கடி இருந்து வருகிறது. இது அனைத்து மாகாணங்களிலும் இருக்கிறது. எந்த நாடுமே இலங்கைக்கு உதவி செய்யாத போது இந்தியாதான் உதவி செய்து வருகிறது. கடந்த நவம்பர் முதல் 7 மாதங்களாக இந்தியா செய்திருக்க கூடிய உதவி 1.5 மில்லியன் டாலர்.கிட்டத்தட்ட ரூ11,000 கோடிக்கும் மேல் இந்தியா கடன் உள்ளிட்ட வழிகளில் கொடுத்திருக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு அன்று இலங்கை மக்களுக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, அதன் பின்னர் அவசர உதவியாக 11,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 2 கப்பல்களில் காய்கறிகளை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது. கடந்த ஏப்ரல் 27-ந் தேதி 720 கிலோ அவசர கால மருந்துகள் அனுப்பி உள்ளோம். இலங்கைக்கு ஆதரவாக சர்வதேச நிதியத்தில் இந்தியா 2 விஷயங்களில் பேசி இருக்கிறது. நடுத்தர வருவாய் உள்ள இலங்கையை வருவாய் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலுக்கு மாற்றி, கடனை திருப்பி செலுத்தும் காலத்தை அதிகப்படுத்த வேண்டும்; உக்ரைனுக்கு அவசர கடனுதவி கொடுத்ததைப் போல இலங்கைக்கும் சர்வதேச நிதியம் அதிகமான பணத்தைத் தர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. இலங்கைக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பி இருக்கிறது இந்தியா. இலங்கையைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையாலும் இந்தியா ஓடோடி வரும் என்கிற நம்பிக்கை அந்த மக்களுக்கு உள்ளது.
கச்சத்தீவு, இலவச விசா
இலங்கை அரசுக்கு பாஜக சார்பாக 2 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். கச்சத்தீவில் ஒவ்வொரு ஆண்டும் அங்கே இருக்கக் கூடிய மேரி மாதா ஆலயத்துக்கு மீனவ சகோதரர்கள் அங்கே சென்று இறைவழிபாடு செய்வது வழக்கம். நம்முடைய தமிழக மீனவர்கள் கடவுச்சீட்டு,விசா இல்லாமல் நேரடியாக கச்சத்தீவு சென்று பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என அங்குள்ள தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 மீனவர்களை சந்தித்தோம். இந்த மீனவர்களுக்கு வரும் 12-ந் தேதி பெயில் கிடைக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக தூதரக அதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்திருக்கிறோம். தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்,












Click it and Unblock the Notifications