ஹிந்து நம்பிக்கைகளை பின்பற்றுவோருக்கு 'வில்லனாகி'விட்ட திமுக எம்.பி. செந்தில்- பாஜக கடும் சீற்றம்
சென்னை: ஹிந்து வழிபாட்டு நம்பிக்கைகளை பின்பற்றும் பெரும்பானமை மக்களுக்கு 'வில்லனாகி'விட்டார் திமுகவின் தருமபுரி எம்.பி.செந்தில் என பாஜகவின் தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது: 'நான் நாத்திகம் பேசவில்லை. நான் பேசுவது சமத்துவம்' என்று கூறுகிறார் தி மு க வின் தர்மபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் @DrSenthil_MDRD அவர்கள். அவர் கலந்து கொண்ட ஒரு ஏரி தூர்வாரும் பணிக்கு முன் பூஜை செய்ததை தடுத்து நிறுத்தியதோடு, மற்ற மதத்தினர் எங்கே? நாத்திகர்கள் எங்கே என்றெல்லாம் கேட்டு தன்னை ஒரு 'கதாநாயகனாக' காட்டி கொள்ள முயற்சித்து ஹிந்து வழிபாட்டு நம்பிக்கைகளை பின்பற்றும் பெரும்பானமை மக்களுக்கு 'வில்லனாகி' விட்டார்.

ஹிந்து என்பவர் யார்?
உண்மையான சமத்துவம் என்பது மத நம்பிக்கைகளை சிதைப்பதில் இல்லை. 'மதசார்பற்ற அரசு' என்றால் எந்த மத நம்பிக்கைகளிலும் தலையிடாத அரசு என்றே பொருள். 'யார் ஒருவர் இஸ்லாமியர் இல்லையோ, கிறிஸ்துவர் இல்லையோ, பார்சி இல்லையோ, அவர் ஹிந்து' என்றே இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அதாவது நம் மண் சார்ந்த பண்பாடு, கலாச்சார வழிபாட்டு நெறி முறைகளை பின்பற்றி வழிபட்டு வருபவர்கள் 'ஹிந்துக்கள்' என அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய ஜனநாயகம்
பெரும்பான்மையாக ஹிந்துக்கள் இருப்பதால் அந்த வழிபாட்டு முறைகளே பொது வெளியிலும் பெரும்பான்மையாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், மற்ற மதங்களை சார்ந்தவர்கள் பொது வெளியில் வழிபாடு நடத்தும் போதோ, சடங்குகளை செய்யும் போதோ யாராலும் எதிர்க்கப்படுவதுமில்லை தடுக்கப்படுவதுமில்லை. இது தான் பெரும்பான்மையினராக உள்ள ஹிந்து மதத்தின் சகிப்புத்தன்மை. இது தான் இந்தியாவின் ஜனநாயகம். இது தான் சமத்துவம் என்பது பொது அறிவு உள்ளவர்களுக்கு புரியும்,

செந்தில் சொல்வது அவசியமா?
இமாம் எங்கே? திராவிடர் கழகம் எங்கே? பங்குத்தந்தை எங்கே? என்றெல்லாம் கேட்கும் @DrSenthil_MDRD அவர்கள், தான் போகுமிடமெல்லாம் அவர்களை அழைத்து செல்வதில் நமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால், அவர்களையும் அழைத்து தான் பூஜை செய்ய வேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. எந்த பணியையும் தொடங்குவதற்கு முன்பு அந்த பணி சிறப்பாக நடைபெற வேண்டி பூஜை செய்வது பணியாளர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, உரிமையும் கூட..

தொடர்ந்து விமர்சிப்பதற்கு கண்டனம்
அதோடு, இது அரசு தொடர்புடைய விவகாரம் அல்ல என்பதை செந்தில் குமார் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, பொறுப்பற்ற முறையில் மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தான்தோன்றி தனமாக நடந்து கொள்வதும், அதை நியாயப்படுத்தும் தொனியில் தொடர்ந்து பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நான் நாத்திகம் பேசவில்லை, சமத்துவம் பேசுகிறேன் என்று சொல்வது ஆணவம். அந்த ஆணவத்தை மூட்டைகட்டி விட்டு அரசியலமைப்பு சட்டத்தை முறையாக கற்று, ஜனநாயக பாதையில் ஒரு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினராக திரு. செந்தில்குமார் அவர்கள் செயல்படுவது சிறப்பை தரும். இல்லையேல், அவரும் அவர் சார்ந்த திராவிட முன்னேற்ற கழகமும் @arivalayam ஹிந்து விரோத மனப்பான்மையோடு நடந்து கொள்வதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications