தவாக தலைவரை உடனே கைது பண்ணுங்க.. எம்.எல்.ஏ பதவியை பறிங்க.. பாய்ந்து வந்த பாஜக!
சென்னை: எஸ்டிபிஐ கட்சி சார்பாக சென்னையில் நடத்தப்பட்ட பேரணியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இந்தநிலையில் பேரணியில் கலந்து கொண்டு சட்ட விரோத கருத்துகளை பேசிய வேல்முருகனை கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து தமிழகத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத செயல்களை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பேரணிக்கு சென்னையில் காவல்துறை அனுமதியளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், இந்த மாநாட்டில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் பேசும் போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பான 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா'வை (PFI) இந்திய ராணுவத்துக்கு நிகராக புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும் காவல்துறை இந்த பேரணிக்கு தடை போட்டிருந்த நிலையில், தானே முதலமைச்சர் அலுவலகத்திலும், சென்னை காவல்துறை ஆணையரிடத்திலும், நுண்ணறிவுப் பிரிவு தலைவரிடத்திலும், உளவுத்துறை பிரிவிலும் பேசி இந்த பேரணிக்கு அனுமதி பெற்றுத் தந்ததாகவும், எஸ் டி பி ஐ யின் துணை அமைப்பான 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' இந்திய ராணுவத்தின் துணைப்படை போன்றது, சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பு என்றெல்லாம் பேசியுள்ளது சட்ட விரோதம் மட்டுமல்ல, தேச விரோத கருத்தும் கூட.
மேலும், இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளின் செயல்களுக்கு தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார் வேல்முருகன். ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்களின் பல படுகொலைகள், குண்டு வெடிப்புகளினால் பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள், கோவை குண்டுவெடிப்பு, ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்துடனான தொடர்புகள் என தேச விரோத, சட்ட விரோத, ஹிந்து மத விரோத செயல்கள் மற்றும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' வினால் அரங்கேற்றப்பட்ட அனைத்து செயல்களுக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான பண்ருட்டி வேல்முருகன் பொறுப்பேற்றுக் கொள்கிறாரா?
அப்படி பொறுப்பேற்பதானால் திமுக தன் சட்டமன்ற உறுப்பினரின் செயல்களை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? இல்லையெனில் அவரை கட்சியை விட்டு நீக்குமா? சட்டமன்ற உறுப்பினர் பதவியை நீக்க பரிந்துரை செய்யுமா? தேசத்திற்கு எதிரான கருத்துக்களை அந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவரையும் கைது செய்வதோடு, பண்ருட்டி வேல்முருகனையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' வின் உறுப்பினர்கள்/ஆதரவாளர்களோடு அவர்களின் தொடர்பு குறித்த தீவிர விசாரணையை முடுக்கிவிட வேண்டும்.
மேலும் நாட்டிற்கு எதிரான பயங்கரவாத செயல்களை சற்றும் சிந்திக்காமல் அரங்கேற்றும் இயக்கங்களை/ நபர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக காவல்துறைக்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வேல்முருகன் பேசியதன் நோக்கம் குறித்து தீர விசாரிக்க வேண்டும்.
மேலும், இவர்களுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்குமேயானால் தேசிய புலனாய்வு முகமையின் உதவியோடு வருங்காலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications