திமுகவினர் பலன் பெறுவதற்கோ என்ற சந்தேகம் வருது.. ஆவின் பாட்டில் குடிநீர் திட்டம்.. அண்ணாமலை எதிர்ப்பு
சென்னை: குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்று எதிர்க்கட்சியாக இருந்த போது கூறிய முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், மில்க் ஷேக், இனிப்பு உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் விற்பனையிலும் இறங்குவதாக ஆவின் நிறுவனம் இறங்க உள்ளதாக தெரிகிறது.

முதல் கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் நாளொன்றுக்கு 1 லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலையானது அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஆவின் நிறுவனம் பாட்டில் குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய திரு மு.க ஸ்டாலின் அவர்கள், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?.
உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications