உழைக்காமலே பதவிக்கு வந்தேனா.. எடப்பாடி மீது பாய்ந்த அண்ணாமலை.. கையை நீட்டி ஆவேசம்.. பரபர பேச்சு
சென்னை: தவழ்ந்து தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, பச்சை மையால் பத்து வருஷமாக கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்று அண்ணாமலை பேசினார். உழைக்காமலே பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும்? அவருக்கு இருப்பது வாயும், வாக்கும் தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசி விமர்சித்தார். என்னை விமர்சித்து பேசுவதற்கு எடப்பாடிக்கு தகுதி கிடையாது என்று மிகவும் ஆவேசமாக கையை நீட்டி நீட்டி பேசினார். அண்ணாமலை பேசியதாவது:-

இந்த கருத்தை பேச வேண்டாம் என்று நினைத்தேன். என்னை பற்றி காலையில் எடப்பாடி பழனிசாமி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். யாரையோ பிடித்து பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும். உழைக்காமலே பதவிக்கு வந்த அண்ணாமலைக்கு என்ன தெரியும். அவருக்கு இருப்பது வாயும், வாக்கும் தான். அவர் மைக்கை பார்த்தாலே பொய் பேசுவார் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த கருத்துக்கு நான் பதிலடி கொடுக்காமல் இருந்தால் நல்லா இருக்காது. எடப்பாடி அவர்களே உங்க ஊர் சிலுவம்பாளையத்தில் ஒரு கொலை நடக்கிறது. பங்காளிக்கு நடந்த சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். அதன்பிற்கு கைது செய்யப்படாத ஒருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்து இருந்தார். இன்று திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர் அப்போது அதிமுக அமைச்சர்.
அவர் கையை, காலை பிடித்து அந்த வழக்கை முடித்துவிட்டு, மீண்டும் சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போனவர் நீங்க.. அதனால் தயவு செய்து எனக்கு நேர்மையை பற்றி, நாணயத்தை பற்றி நீங்க எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் நடந்தது ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வா? ஒரு புரட்சி தலைவர், புரட்சித் தலைவி நடத்திய கட்சியை கூவத்தூரில் என்ன அநியாயம் செய்தீங்க..
தவழ்ந்து தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு தன்மானம் மிக்க ஒரு விவசாயினுடைய மகனை, பச்சை மையால் பத்து வருஷம் கையெழுத்து போட்டும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத இந்த அண்ணாமலையை பற்றி சொல்வதற்கு எடப்பாடி எனும் தற்குறிக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது. என்று கையை நீட்டி நீட்டி ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "இது அகந்தை.. இது அகந்தை.. 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு 4ஆம் இடம் கூட கிடையாது. தூக்கி எறியப்படுவீர்கள்.." இவ்வாறு அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்த கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. வேறு ஏதோ வழியில் இவர் பதவி பெற்றுள்ளார்.
அந்த பதவியை வைத்து இன்று தலை, கால் புரியாமல் அண்ணாமலை ஆடிக் கொண்டிருக்கிறார். நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்துதான் முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துருக்கிறேன். மக்களை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும், நாக்கும் தான். அவரை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் மட்டும் பாஜகவுக்கு தேவை. திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறை சொல்கிறார். அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி, மோசமான ஆட்சி எனச் சொல்கிறார் அண்ணாமலை. திமுகவை போல பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது. எம்ஜிஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார். மத்திய அரசின் ஆட்சியாளர்கள் வந்து நாணயத்தை வெளியிட்டால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் என பாஜக கூறிக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் பற்றி அண்ணாமலை பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. திமுகவும், பாஜகவும் வெளியே மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் உள்ளே உறவாடி கொண்டிருக்கின்றனர். இதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்" என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications