Annamalai Files: தந்தை பெரியார் முதல் கொள்ளு பேரன் உதயநிதி வரை-தேரை இழுத்து தெருவில் விட்ட அண்ணாமலை!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் அண்ணாமலை, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். திராவிடர் இயக்கத்தின் நிறுவனர் தந்தை பெரியார் முதல் இன்றைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரை அத்தனை பேரையும் கடுமையாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கியவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகா மாநில ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பணியில் இருந்த போதே விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார்.

தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இணைந்தார். பின்னர் அதிரடியாக தமிழ்நாடு பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதலே ஏகப்பட்ட சர்ச்சைகள்.. அத்தனையும் அதிரிபுதிரி ரகம்தான்.. அண்ணாமலையின் விமர்சனங்களாலேயே அதிமுகவுடனான கூட்டணி முறிந்தது. தற்போது அதே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது. இதனாலேயே அண்ணாமலையை, தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கிறது டெல்லி மேலிடம்.
தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்த காலத்தில் அண்ணாமலை முன்வைத்த ஒன்றிரண்டு விமர்சனங்களின் தொகுப்பு மட்டுமே இது.
அருவருப்பானவர் தந்தை பெரியார்
பெரியார் பேசிய பல சர்ச்சைகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பெரியார் பேசியதையெல்லாம் பொதுவெளியில் பேச முடியாது. பெண்கள், குழந்தைகள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். பெரியார் பேசியதை பொதுவெளியில் பேசினால் மக்களுக்கு அருவருப்பாக இருக்கும்.
அதிமுகவுடன் கூட்டணியா? ராஜினாமா செய்வேன்
திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்தத் தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று பாஜக மேலிடம் முடிவெடுத்தால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்
மன்னிப்பு கேட்டவர்தான் அண்ணா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 1956ம் ஆண்டு நடந்த தமிழ் சங்க பொன் விழா கூட்டத்தில், அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்துராமலிங்க தேவர் மிரட்டினார். இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் மன்னிப்பு கேட்டு விட்டு மதுரையை விட்டே வெளியேறினர்.
ரயில் பெட்டி பழக்கூடையும் கருணாநிதியும்
'வனவாசம்' என்ற புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் அற்புதமான விஷயத்தை எழுதியிருப்பார். கண்ணதாசனும், கருணாநிதியும் ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏழை வியாபாரி தனது பழக் கூடையை வைக்கிறார். இதையடுத்து கழிவறைக்கு அந்த வியாபாரி சென்று விடுகிறார். பழக் கூடையை கண்ணதாசனும், கருணாநிதியும் பார்க்கின்றனர். கண்ணதாசனை பார்த்து திருடலாமா? என்று கருணாநிதி கேட்கிறார். அப்போது ஆரம்பித்த திருட்டு என்பது 1967ல் ஆட்சியை பிடித்து தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அறிவாலயத்தின் செங்கல்லை உருவாமல்...
பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்
டாஸ்மாக் முதல் குற்றவாளி ஸ்டாலின்
டாஸ்மாக் முறைகேட்டில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் தான். தவெக 'வொர்க் ப்ரம் ஹோம்' அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மக்களின் பிரச்சினை எப்படி தெரியும். தவெக திமுகவின் இரண்டாவது அணி.
ஜெயலலிதா ஊழல்வாதி; இந்துத்துவவாதி
தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தன. முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது
ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்; விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருகிறது.
தவழ்ந்து பதவி வாங்கிய தற்குறி எடப்பாடி பழனிசாமி
பிட்டிங் ஏஜென்ட் பார்ட்டியாக, டெண்டர் முறை விடும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளது. நேர்மை, நாணயத்தை பற்றி எடப்பாடி பழனிச்சாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லை. மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனிசாமி என்னைப்பற்றி பேசக்கூடாது.
கெட் அவுட் மோடியா? உதயநிதி... நீ பேசித்தான் பாரு..
உதயநிதி சொல்கிறார். மோடி வந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்வாராம். உதயநிதிக்கு சொல்கிறேன். நீ சரியான ஆளா இருந்தா சொல்லி பாரு. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு. எங்க அப்பா முதலமைச்சர். என் தாத்தா 5 முறை முதலமைச்சர். நீ சொல்லிப் பாரு. உன் வாயில் இருந்து எங்க உலகத் தலைவர் மோடியை சொல்லி பாரு. உன் அப்பா சிட்டிங் முதலமைச்சர், நீ துணை முதலமைச்சர். சொல்லி பாரு. இரண்டு நாட்களுக்கு முன்னாடி என்ன சொன்ன? கெட் அவுட் மோடின்னு சொல்வாராம். வெளிய போடா மோடின்னு சொல்வாராம். உனக்கு ஒரு உலகத்தலைவரை மதிக்கத் தெரியல. நீ கத்துக்குட்டி. காலைல 11 மணிக்குத்தான் உன் மேல் வெயிலே படும். நீ சூரியனை காலைல பார்த்ததே கிடையாது. உச்சிக்கு வந்ததுக்கு அப்புறம்தான் பார்ப்ப..
தமிழக மீனவர்கள் கடத்தல்காரர்கள்
200 ஆண்டுகளாக மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமூக விரோதிகள் மீனவர் என்ற போர்வையில் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களே பிரச்னையை தூண்டி விடுகின்றனர்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துரும். நான் எவ்வளவோ பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டுத்தான் வந்திருக்கேன். நான் வன்மத்தைக் கையில் எடுப்பதற்குத் தயாராக இல்லை.
தவெக தலைவர் நடிகர் விஜய்
ஊடகங்களின் வெளிச்சத்திற்காக பிரதமர் மோடி குறித்து பேசுகிறார் நடிகர் விஜய். மைக் எடுத்து பேசி கைகாட்டிவிட்டு போவதில்லை அரசியல்; களத்தில் வேலை செய்ய வேண்டும். சக்திமிக்கவர்களை பேசினால் மைலேஜ் கிடைக்கும் என்பதால் பிரதமர் மோடி பற்றி நடிகர் விஜய் பேசுகிறார். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்?
இவை எல்லாம் அண்ணாமலையின் ஒரு சில விமர்சனங்கள்தான்.. இந்த பட்டியல் மிக நீண்டது!












Click it and Unblock the Notifications