மொழி, ஜாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் திமுக-பாஜக நாராயணன் பகீர் ட்வீட்
சென்னை: மொழி, ஜாதியால் மக்களை தூண்டிவிட்டு இந்தியாவையே பிளக்க நினைக்கிறது திமுக என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் அண்மையில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இக்கூட்டத்தில் அமித்ஷா பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரும் பஞ்சாயத்தை கூட்டிவிட்டது.

அமித்ஷா இந்தி திணிப்பு
அதாவது இந்தியாவில் மாநிலங்களிடையேயான தொடர்பு மொழியாக இப்போது ஆங்கிலம் உள்ளது; இதற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா பேசினார். அவரது இந்த பேச்சு, இந்தி திணிப்பை பகிரங்கப்படுத்துவதாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அமித்ஷாவின் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மத்திய பாஜக அரசு இந்தி திணிப்பை மீண்டும் மீண்டும் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

திமுக இளங்கோவன்
இந்த பின்னணியில் திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் இந்தி திணிப்புக்கு எதிராக தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்தி மொழி என்பது வளர்ச்சி அடையாத மாநிலங்களின் மொழி; நாட்டில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் மொழிகளை எடுத்துக் கொண்டால் இந்தி அல்லாத மொழிகளே தாய்மொழியாக கொண்டவை என குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தி மொழி திணிப்பானது நம்மை சூத்திரர்களாக்கும்; இந்தி திணிப்பு அதன் கலாசாரத்தை திணிக்கக் கூடியது என்றும் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியிருந்தார்.

தமிழக பாஜக
இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாராயணன் திருப்பதியின் பதிவு: முன்னேறாத மாநிலங்களின் மொழி 'ஹிந்தி'. ஹிந்தியை பின்பற்றினால் 'சூத்திரர்களாகி' விடுவோம் : டி கே எஸ் இளங்கோவன், தி மு க.
மொழி அரசியல் செய்து வந்த தி மு க மொழியோடு சாதியை இணைத்து அரசியல் செய்ய முனைவது பிரிவினை கருத்துகளை விதைப்பதற்கே.

இந்தியாவை பிளக்க சதி
நீதிக்கட்சியின் வழி வந்தவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் தி மு க இந்த பேச்சின் மூலம் தாங்கள் 'தலித்' மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வருட ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க, மொழியால், சாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் தி மு கவின் முயற்சி முறியடிக்கப்படும். இவ்வாறு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications