ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டர் ஏன்? என்ன நடந்தது.. போலீசார் பரபரப்பு விளக்கம்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி, படு கொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு மட்டும் இன்றி நாடு முழுவதும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாபு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன? எப்போது, எங்கு, எப்படி கொலையை அரங்கேற்ற வேண்டும் என திட்டம் தீட்டிக் கொடுத்தது யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவேங்கடம் என்கவுண்டர்: ஆம்ஸ்ட்ராங் கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? பின்னணியில் பெரும் புள்ளி எதுவும் உள்ளதா? என்பன போன்ற கோணத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்த இடங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை இன்று காலை 5.30 மணியளவில் விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, ரவுடி திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த என்கவுண்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள்.
போலீஸ் விளக்கம்: இந்த நிலையில் தான், என்கவுண்டர் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை கூறியிருப்பதாவது:- கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இயற்கை உபாதைக்காக: மேற்படி கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று 14.07.2024 தேதி அதிகாலை, போலீஸ் காவலில் இருந்த எதிரி திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.
அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு எதிரி தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை.
முதல் தகவல் அறிக்கை: புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த எதிரி திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, எதிரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் எதிரி திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த எதிரி உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக M3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications