பள்ளி கல்வித் துறையின் கீழ் அனைத்து சமூகப் பள்ளிகள்- மிக துணிச்சலான முடிவு: திருமாவளவன், ரவிக்குமார்
அனைத்து சமூக பள்ளிகளும் பள்ளி கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளி கல்வித் துறையின் கீழ் அனைத்து சமூகப் பள்ளிகள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு மிக துணிச்சலானது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் 2023 இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்ற அறிவிப்பு: பொதுவாழ்வில்அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமஉரிமையையும் நிலைநாட்டிட கல்விநிலையங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இதன்அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.இத்திட்டங்களின் பயன்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டியது அவசியமாகும். மாண்புமிகுமுதலமைச்சர்அவர்களின்தலைமையில் 19-08-2021 மற்றும் 12-04-2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கல்விப் பெருவழியில் நமதுஇலட்சியமான சமூகநீதியை அடைந்திட, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும்வேண்டும். இதனைக்
கருத்தில் கொண்டு,
ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை,
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை,
வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும்
அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்துபணிப்பயன்களும் பாதுகாக்கப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த அறிவிப்பை வரவேற்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:அனைத்துச் சமூகப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டுவர தமிழ்நாடுஅரசு எடுத்துள்ள துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்கிட முன் வந்துள்ள மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி:அரசு நடத்தும் பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்களை நீக்கியும், பல்வேறு துறைகளால் நடத்தப்பட்டுவந்த பள்ளிகள் அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவந்தும் தமிழ்நாடு பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள அறிவிப்பை வரவேற்கிறேன்.












Click it and Unblock the Notifications