அசத்தல் அறிவிப்பு.. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவிகளுக்கும் புதுமை பெண் திட்டம்
சென்னை: புதுமை பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரூ. 370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ந் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர், காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்ற திருக்குறள் போல, நமது ஆட்சி நடந்து வருகிறது எனக்கூறி பட்ஜெட் உரையை தொடங்கினார். தொடர்ந்து மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் இனி அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு கூறியதாவது:- காலத்திற்கு ஏற்ப அரசு நல நலத்திட்டங்களை மாற்றி தகவமைத்து கொள்வது மிகச்சிறந்த அரசின் செயல்பாடு ஆகும். அந்த வகையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மகளிர் உயர் கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்டுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமை பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பயன் அடைந்து வருகிறார்கள்.
இத்திட்டம் அறிமுகம் செய்த பின்னர் உயர் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 34 சதவிகிதம் அதிகரித்து கூடுதலாக 34 ஆயிரத்து 460 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இத்தகைய சிறப்புகளை கொண்ட புதுமை பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரூ. 370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications