தமிழக சி.பி.எஸ்.இ. தேர்வுகளில் நூதன முறைகேடுகள்.. முதல் பருவ தேர்வுகள் ரத்தாகிறதா?
சென்னை: தமிழக சி.பி.எஸ்.இ பருவத் தேர்வுகளில் ஆசிரியர்கள் உதவியுடன் நூதன முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து சி.பி.எஸ்.இ. பருவத் தேர்வுகள் ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான மையங்களாக அந்தந்த பள்ளிகளே அறிவிக்கப்பட்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் அதிகாரம் வழங்கியது சி.பி.எஸ்.இ. நிர்வாகம்.

பருவத் தேர்வுகள்
இத்தேர்வுகள் கடந்த மாதம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 22 வரை நடைபெற்றது. இத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களாக பள்ளிகளின் முதல்வர்களே இருந்தனர். இத்தேர்வுக்கான வினாக்கள், ஒரு மதிப்பெண் வழங்க கூடியதாகவும் விரிவான விடைகள் இல்லாமல் இருந்தன. மார்ச் மாதம் நடத்துகிற தேர்வில் விரிவான வினாக்கள் இடம்பெறுமாம். கொரோனா காலம் என்பதால் இப்படி ஏற்பாடு செய்ததாம்.

நூதன முறைகேடுகள்
இந்த தேர்வில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன; பள்ளி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களை நூதன வழிகளில் முறைகேடுகள் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் க்கூறப்படுகிறது. அதாவது கேள்வித்தாள்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு லீக் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். வாட்ஸ் அப் உள்ளிட்டவை மூலம் வினாத்தாள்களை பள்ளி நிர்வாகங்களே மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறது.

விடைத்தாள் திருத்தம்
ஒரே மையில்தான் தேர்வு எழுத வேண்டும்; தெரியாத வினாக்களுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு அறிவுறுத்தியது. அத்துடன் சந்தேகத்துக்குரிய வினாக்களுக்கு ஸ்மால் லெட்டர் c என எழுதி வைத்தால் போதும். இதனை a,b,d என எப்படி வேண்டுமானாலும் ஆசிரியர்களே மாற்றிவிடுவார்களாம். தங்களது பள்ளிகளின் ரிசல்ட்டை அதிகரிக்கும் வகையில் இத்தகைய முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து?
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ நிர்வாகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் முதல் பருவ சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்தாகக் கூடும் என்கின்றன கல்வித்துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications