இலவச பயணம் உபயோகமா?..பேருந்தில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்
சென்னை, ஆர்.கே.சாலையில் அரசுப் பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது இலவச பேருந்து திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு மு.க ஸ்டாலின் இன்று அரசுப்பேருந்தில் பயணம் செய்தார். பெண் பயணிகளிடம் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
Recommended Video
கடந்த ஆண்டு மே மாதம் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் அவ்வப்போது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென நடைப்பயிற்சி, சைக்கிள் பயணம் மேற்கொள்வார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அங்குள்ள மக்களிடம் உரையாடுவார்.

ஓராண்டு நிறைவு
திமுக ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து விட்டது. அதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் இருந்து கிளம்பி கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தயாளு அம்மாவிடம் ஆசி
கோபாலபுரம் இல்லத்தில் தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தனது அன்னை தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அப்போது அமைச்சர்கள், மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் உடனிருந்தனர்.

பேருந்தில் பயணம்
கோபாலபுரம் இல்லத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மெரீனா கடற்கரைக்கு சென்றார். திடீரென பேருந்து நிறுத்தத்தின் அருகில் காரை நிறுத்தி 29 சி பேருந்தில் ஏறினார். முதல்வரை பேருந்தில் பார்த்த பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பலரும் முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் எழுந்து நின்றனர் அவர்களை அமரச்சொன்ன ஸ்டாலின் இலவச பேருந்து பயணம் பயனுள்ளதாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார். பஸ் கண்டக்டரிடமும் பேசிக்கொண்டே பயணித்தார்.

மெரீனாவில் மரியாதை
பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்ற உடன் இறங்கி கார் மூலம் மெரீனா கடற்கரைக்கு சென்று அண்ணா கருணாநிதி, நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். தலைமைச் செயலகம் வந்து ஓராண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications