நெருங்கிடுச்சு.. மீட்டிங் போட்ட தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.. அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய ஆர்டர்!
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மிக முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் விலகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது. வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, வழகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கூடுதல் ஆணையர், நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சென்னை உட்பட பல நகரங்களிலும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஏற்கனவே மேற்கொண்டு வரும் பணிகளை மட்டும் உடனடியாக முடிக்குமாறும், புதிய சாலை போடும் பணிகள் அல்லது வடிகால் பணிகளை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications