ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் வழக்கு.. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
சென்னை: ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஏராளமானோர் மரணிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தியை செய்யலாமே என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 9.15 மணிக்கு கூட்டம் கூடுகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications