வளம் மிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள் - முதல்வர் வாழ்த்து
அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
சென்னை: வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆசிரியர் பணியை தொடங்கி தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த மாமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஔவையார் ஒருவருக்கு எண்ணும் எழுத்தும் கண்களைப் போன்றது என்று கல்விச்செல்வத்தின் பெருமையை குறிப்பிட்டுள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற தெய்வ நிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.


அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளில் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications