காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. ராயபுரத்தில் கலகல பிரச்சாரம்!
சென்னை: பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருப்பதாகவும் எனவே அதற்காகவே அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. இதேபோல் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐஜேகே,மதிமுக, உள்ளிட்டவை ஓர் அணியாகும் கூடடணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எங்க யாரையுமே காணோம்.. முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்! உண்மையா?
தலையில் மைக்
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். ராயபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, கையில் பிடிக்கும் மைக்கில் அல்லாமல் தலையில் மாட்டிய மைக்குடன் பொதுமக்களிடம் பேசினார்.
பாதுகாப்பான நாடு
அப்போது அவர் கூறுகையில், "நாட்டினுடைய பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கிறதோ அங்கு தான் வளங்கள் அனைத்தும் இருக்கும். அப்படி பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்றால், ஒரு திறமை மிக்க, வலிமை மிக்க தலைவர் இந்த நாட்டை ஆள வேண்டும்.
அதிமுக கூட்டணி
அப்படி தகுதி வாய்ந்த பிரதமர் நமது நரேந்திர மோடி. நம் நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், அண்டை நாடுகள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து சதி செயல்களை செய்வதை பார்த்திருக்கிறோம் அப்படிப்பட்ட தீவிரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது. எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
எங்க ஊர்க்காரர்
நாம் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி, பலம் பொருந்திய கூட்டணி, நமது தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அவரும் அன்பானவர், எனது மாவட்டத்துக்காரர். நாங்கள் அருகருகே வசிக்கிறோம். மக்களுக்காக ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இங்கிருக்கின்ற பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து மக்களுககு நல்ல திட்டங்களை பெற்றுத்தருவார் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலினுக்கு பதில்
இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசுகையில், அதிமுக கூட்டணி நாட்டிலே என்ன நன்மை செய்தது என்று கேட்கிறார். அதிமுக இயக்கம் மக்களுக்காக செய்தது ஏராளம். மக்களுக்காவே வாழ்ந்தவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆரும் புரட்சி தலைவி ஜெயலலிதாவும், அவர்கள் ஏராளமான நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.