பொதுவாழ்வுக்கு இலக்கணம்-பகுத்தறிவு பகலவன்- தந்தை பெரியாருக்கு எடப்பாடியார், ஓபிஎஸ், தினகரன் புகழாரம்
சென்னை: பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாளை முன்னிட்டு தலைவர்கள் அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிம்சன் பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மாலை அணிவித்தும் முழக்கங்களை எழுப்பி உறுதி மொழி ஏற்றும் மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட்: பெண் விடுதலைக்காகவும், சாதி பேதமற்ற சமுதாயம் காணவும் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளை தனது வாழ்வின் லட்சியமாகக்கொண்டு இறுதிமூச்சு வரை போராடிய "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்" அவர்களின் நினைவுநாளில், சமூகநீதி காத்து மக்கள் அனைவரும் சமநீதி பெற அயராது பாடுபடுவோம் என உறுதி ஏற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்: மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் இன்று! சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் அமைவதற்கும், பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர் தந்தை பெரியார். அவர்களின் வழியில் சமூகநீதியைக் காத்து நின்று, ஏற்றத்தாழ்வு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்றிடுவோம்!