எதிரே வரும் அஸ்திரத்தை.. அப்படியே திருப்பி ஏவப்போகும் எடப்பாடியார்.. காத்திருக்கு அதிரடி அறிவிப்பு
சென்னை: "இதற்குப் பெயர்தான் எதிரணியின் அஸ்திரத்தை கையில் பிடித்து.. அதை வைத்தே திருப்பித் தாக்கும் யுக்தி.." என்று சிலாகிக்கிறார்கள் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
Recommended Video
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த மாதம் வெளியிடப் போகும் ஒரு அதிரடி அறிவிப்பு பற்றி தான், இப்போது அதிமுக வட்டாரத்தில் பரவலாக, பரபரப்பாக பேசப்படுகிறது.
அதுவும் திமுக ஏற்கனவே அறிவித்து விட்ட அந்த அறிவிப்பை அப்படியே திருப்பிப் போட்டு தாக்க போகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
தேர்தல் அறிக்கைகள்
வேறு எந்த மாநிலத்தை விடவும் தமிழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இந்தியா முழுக்க உள்ள மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். முதன்முறையாக இலவச கலர் டிவி வழங்குவதாக 2006-ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கு இந்த தேர்தல் அறிக்கை மிக முக்கிய பங்கு வகித்தது.
தேர்தலின் கதாநாயகன்
இதையடுத்து இலவச ஆடுகள் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் என அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் மாறிமாறி தேர்தல் அறிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த ஆரம்பித்தன. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய கட்சி தலைவர்களை தாண்டி தேர்தலின் கதாநாயகன் என்ற அந்தஸ்தை தேர்தல் அறிக்கைகள் பெறத் தொடங்கின. இந்த தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை பக்காவாக தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.
அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம்
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை மலைபோல நம்பிக்கொண்டு இருக்கின்றன. இதில் சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் உள்ள வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
20 ஆயிரம் கோடி ரூபாய்
கிராமப்புற, ஏழை, எளிய விவசாயிகள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது. இது, முதல்வர் கவனத்துக்கும் சென்றுள்ளது. எனவே, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரின் போது, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். எனவே, இதற்கு நிதி நிலைமை கை கொடுக்காது என்று அதிகாரிகள் சிலர் கையைப் பிசைந்தாலும், எப்பாடுபட்டாவது இதைச் செய்தாக வேண்டும் என்று உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வாக்கு உயரும்
ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்த ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே செய்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிராமப்புறங்களில் மேலும் செல்வாக்கு உயரும். மண்டலம் பாகுபாடு இல்லாமல் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கலை முன்னிட்டு தலா 2500 ரூபாய் வழங்கப்பட்ட திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
எடப்பாடியார் அதிரடி
கொரோனா காலத்தில் பள்ளிகளை திறக்காமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்ய உத்தரவிட்டது தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல மக்கள் மனங்களில் இடம் பெறக்கூடிய பல திட்டங்களையும்.. குறிப்பாக, உடனடியாக பலன் தரக்கூடிய திட்டங்களை கையில் எடுத்து அசத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தவகையில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தால் அது எடப்பாடி பழனிச்சாமியின் கைகளுக்கு கிடைக்கப் போகும் மாபெரும் பிரம்மாஸ்திரமாக மாறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தேர்தல் அறிக்கையில் அதிரடிகள்
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை மலைபோல நம்பிக்கொண்டு இருக்கின்றன. இதில் சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் உள்ள வங்கிக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.