'தொழில் துறையில்.. தெற்காசியாவிலேயே நம்பர் ஒன் ஆக தமிழ்நாட்டை மாற்றுவேன்'.. முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த இடம் தமிழ்நாடு என்னும் நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டு கோட்டையில் உள்ள ஹுண்டாய் நிறுவனத்தை தமிழ்நாடு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.ஹூண்டாயில் உற்பத்தியான ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து ஹுண்டாய் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பேட்டரி கார்களையும் அவர் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

அதிக உற்பத்தி
ஹுண்டாய் கார் நிறுவனம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளிலேயே அதிக உற்பத்தியை செய்யும் நிறுவனமாக ஹுண்டாய் இருந்து வருகிறது. அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறந்த இடம்
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. ஹுண்டாய் நிறுவனத்தை போன்று மற்ற நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களது முதலீட்டை அதிகப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். தெற்காசியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த இடம் தமிழ்நாடு என்னும் நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலோசனை குழு
இதனை அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் தெரிவித்து கொள்வதை பெருமைப்படுகிறேன். தொழில் துறையில் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக ஆக்குவதற்கான அடிப்படை திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். உலக புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள் கொண்ட ஆலோசனை குழுவை அமைத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு வழங்குவோம்
இது தொழில் நிறுவனங்களுக்கு மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications