ஆற்றில் உருண்டு வந்த கரடியை பிடித்த ஆள்.. குட்டி ஸ்டோரி சொல்லி பாஜக- அதிமுகவை அட்டாக் செய்த ஸ்டாலின்
சென்னை: பாஜக கூட்டணியை முறித்துக் கொள்ள அதிமுக தயாராகிவிட்டதாகவும் ஆனால் பாஜக விட மறுப்பதாகவும் மறைமுகமாக விமர்சித்து முதல்வர் மு.க ஸ்டாலின் குட்டிக்கதை ஒன்றை சொல்லி இருகட்சிகளையும் கடுமையாக சாடினார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு அமைச்சர் கே.என்.நேரு புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணி அளவில் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அதிமுக மற்றும் பாஜகவையும் விமர்சித்து பேசினார். முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம். எனது வாழ்வில் மறக்க முடியாத ஊர் இதுவாகும். கருணாநிதி நூற்றாண்டில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் வென்றாக வேண்டும். குறிப்பாக சேலத்தில் வெற்றி பெற வேண்டும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை மக்கள் அகற்றிவிட்டு நம்மிடம் ஆட்சியை வழங்கியுள்ளனர்.
திமுக ஆட்சியை வீழ்த்தவே முடியாது என்ற நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சேலத்தில் பெருவாரியாக வெற்றி பெற திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பிற்கான அங்கீகாரம் நிச்சயமாக கட்சியினரை வந்து சேரும். நாடும் நமதே, நாற்பதும் நமதே இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன்" என்றார்.

தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குட்டிக் கதை சொல்லி அதிமுக - பாஜக கூட்டணியை சாடினார். முதல்வர் மு.க ஸ்டாலின் கூறிய குட்டிக் கதை வருமாறு: "ஆற்றிலே வெள்ளம். திடீரென பெருக்கெடுத்து வந்தது. அப்போது பல பொருட்கள் எல்லாம் ஆற்றில் அடிச்சிட்டு போகுது. கரையில் நின்று கொண்டிருந்த நமக்கு எதாவது அகப்படாதா என்று பொதுமக்கள் காத்துக்கொண்டு இருந்தாங்க...
அப்போது கருப்பாக பெருசா ஒன்னு உருண்டு வந்தது. அதை எடுப்பதற்கு பலருக்கும் போட்டி. ஒரு ஆள் அதைக் கைப்பற்றி விட்டார். கைப்பற்றிய பிறகுதான் தெரிந்தது உருண்டு வந்தது கரடி என்று. இப்போது அந்த ஆள் கரடியை விட தயராகிவிட்டார். ஆனால், அந்த கரடி அந்த ஆளை விட தயாராக இல்லை. அந்த ஆளும் கரடியும் போன்றதுதான் அதிமுகவும் பாஜகவும். மக்கள் வெள்ளத்தில் இவர்கள் இருவருமே அடித்து செல்லப்படுவார்கள் என்பது தான் உறுதி" என்றார்.












Click it and Unblock the Notifications