ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு- நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தல்!
சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழக அரசின் நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் தொடருகின்றன. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்டவைகளை நீண்டகாலம் கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கொடுத்த நெருக்கடியால் நீட் மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் டெல்லியில் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கொள்கை ரீதியாக ஆளுநர் பதவிக்கு எதிரானது.

இந்த கொள்கையை வெளிப்படுத்தும் வகையில், பல்கலைக் கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்தது பறித்தது தமிழக அரசு. தற்போது புதிய கல்வி கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.
சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில், புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும். இங்கு சிலர் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்கு படித்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அதுபற்றி பேசி வருகிறோம் என வெளிப்படையாகவே ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி ராஜ்பவனில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications