எதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர்..வேண்டுதலை நிறைவேற்றிய துர்கா ஸ்டாலின்
சென்னை: நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்து வித சூழ்ச்சிகளையும் முறியடித்து எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க முடியும் என்பது ஐதீகம். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் துர்கா ஸ்டாலின். கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்துவித சூழ்ச்சிகளில் இருந்தும் விடுபட முடியும் என்பது ஐதீகம். கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது வெற்றிக்காக வழிபட்ட துர்கா ஸ்டாலின் இந்த ஆண்டு வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நேற்றைய தினம் தென்காசியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசினார்.
முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். அவர் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் வழிபாடு நடத்தினார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா ஸ்ரீபத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதி சுவாமியையும் தரிசித்தார்.
எடப்பாடி புலம்புவதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வேஸ்ட் செய்யமாட்டேன்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
எதிரிகளை வெல்லும் நரசிம்மர்
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் நரசிம்மர் கோயில் 1,100 வருடங்கள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் அபூர்வஸ்ரீ நரசிம்மர் காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலின் கல்வெட்டில் பெருமாளின் திருப்பெயர் முனையெதிர் மோகர் விண்ணகர் அதாவது போரில் எதிரிகளை வெல்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிரிகளை வெல்லும் வலிமை
நரசிம்மர் கோயிலில் வழிபட்டால் அனைத்து வித சூழ்ச்சிகளையும் முறியடித்து எதிரிகளே இல்லை என்கிற நிலைமையை உருவாக்க முடியும் என்பது ஐதீகம். அதனால் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தக் கோயிலுக்கு வழிபட்டு செல்கின்றனர். இந்தக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்ட துர்கா ஸ்டாலினும் கடந்த ஆண்டு தனது கணவரின் தேர்தல் வெற்றிக்காக வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டார்.
வெற்றி பெற்ற ஸ்டாலின்
நரசிம்மர் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றால் நினைத்த காரியம் நடக்கும். எதிரிகளின் சூழ்ச்சியை எளிதில் முறியடித்து வெற்றிகளைக் கைப்பற்ற முடியும் என்பது நம்பிக்கை என்று கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலின் குருக்கள் ஆனந்தன் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் மு.க ஸ்டாலின்.
வேண்டுதல் நிறைவேற்றம்
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் உடன் பயணம் செய்தார் துர்கா ஸ்டாலின். பல பிரபல கோவில்களில் வேண்டுதல் வைத்து தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். திருச்செந்தூர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார். நேற்றைய தினம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் துர்கா ஸ்டாலின்.