செல்வப்பெருந்தகையிடம் ராஜினாமா கடிதத்தை.. எழுதி வாங்கிய ராகுல் காந்தி! திடீர் முடிவு? உடைந்த பின்னணி
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் மிகப் பெரிய அதிரடி மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் முடிவுகள் வந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராகுல் காந்தியிடம் ஏற்கனவே தெரிவித்ததாக ஒரு தகவல் பரவியது.

ராஜினாமா பின்னணியில் இருக்கும் உண்மை
இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள அதிரடி உண்மையை நாம் தான் முதன்முதலில் 'ப்ரேக்கிங்' செய்தியாக வெளியிட்டோம். செல்வப்பெருந்தகை சுயமாக பதவி விலகுவதாகச் சொல்லவில்லை; மாறாக, ராகுல் காந்தியின் நேரடி உத்தரவின் பேரில் அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது என்பதே தற்போதைய ஹாட் நியூஸ்.
செல்வப்பெருந்தகை திமுக தலைமையுடன் காட்டி வரும் அதீத நெருக்கமும், அவர் ராகுல் காந்திக்கு முழுமையான உண்மையாக இல்லை என்பதும் டெல்லி தலைமைக்குத் தெரியவந்துள்ளது. இதனால்தான், "நீங்களாக விலகுவதை விட, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிடுங்கள்" என ராகுல் காந்தி கறாராக உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அவரே முன்வந்து பதவி விலகுவது போன்ற ஒரு சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட உள்ளது.
தலைவர் பதவிக்கு நடக்கும் மல்லுக்கட்டு
செல்வப்பெருந்தகையின் பதவி பறிபோவது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த இடத்தைப் பிடிக்க தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய முகங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் மேலிடத்தின் ஆசியைப் பெற இரண்டு விதமான அணிகள் காய் நகர்த்தி வருகின்றன.
திமுகவுடன் மல்லுக்கட்டும் அணி:
திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்தும், கூட்டணியில் காங்கிரஸின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் எனத் துடிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். குறிப்பாக, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் இந்த வரிசையில் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் திமுகவுடனான உறவில் ஒருவிதமான இறுக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணக்கமான அணி:
மற்றொரு பக்கம், காங்கிரஸ் தலைமையையும் திமுக தலைமையையும் ஒரே நேர்க்கோட்டில் கையாளக்கூடிய 'ராஜதந்திர' தலைவர்கள் உள்ளனர். கார்த்தி சிதம்பரம் மற்றும் செல்லக்குமார் ஆகியோர் இந்த பதவி மோகத்தில் முன்னிலையில் உள்ளனர். திமுகவுடன் சுமூகமான உறவைப் பேணுவதன் மூலமே தமிழகத்தில் கட்சியைத் தக்கவைக்க முடியும் என்பது இவர்களின் வாதம்.
ராகுல் காந்தியின் முடிவு என்ன?
தமிழகத்தின் புதிய தலைவராக திமுகவுடன் மல்லுக்கட்டும் ஒருவரை நியமிப்பதா அல்லது இணக்கமாகச் செல்லும் ஒருவரை நியமிப்பதா என்பதைப் பொறுத்தே ராகுல் காந்தியின் இறுதி முடிவு இருக்கும் என சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செயல் தலைவர்கள் மூலம் செக்?
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளார். இந்த முறை நியமிக்கப்படும் தலைவரை முழுமையாகச் செயல்பட விடுவதை விட, அவரைத் தொடர்ந்து கண்காணிக்கவும், ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஒன்று அல்லது இரண்டு செயல் தலைவர்களை (Working Presidents) நியமிக்க வேண்டும் என்று கே.சி. வேணுகோபாலிடம் அவர் வலியுறுத்தி வருகிறாராம். இது குறித்து ராகுல் காந்தியிடம் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகையின் அடுத்த பிளான்?
பதவி பறிபோகும் நிலையில் உள்ள செல்வப்பெருந்தகை, தனது அரசியல் எதிர்காலம் குறித்து ரகசியத் திட்டம் ஒன்றையும் கையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் ஒருவேளை அவருக்குச் சாதகமாக அமையாமல், அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டால், நேரடியாக திமுகவில் இணைந்துவிடுவது குறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.
மொத்தத்தில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் ஒரு மிகப்பெரிய 'சுத்திகரிப்பு' படலம் அரங்கேறப் போவது மட்டும் உறுதி. புதிய தலைவர் யாராக இருப்பார் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் கூட்டணி அரசியலில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
- சிறப்பு நிருபர் எழில்













Click it and Unblock the Notifications