யாருக்கும் தெரியாமல் உதவி செய்தார் உதயநிதி.. புற்றுநோயால் அவதிப்படும் ஷிஹான் ஹுசைனி உருக்கம்
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் தன்னை நெகிழ வைத்துவிட்டதாகவும், யாருக்கும் தெரியப்படுத்தாமல் உதவி செய்ததாகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில்தான் அறிமுகமானார். அது போல் பத்ரி படத்தில் விஜய்க்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராகவும் ஹுசைனி நடித்திருக்கிறார். 60 வயதான இவர் ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும்.
மருத்துவர்களும் ஒன்றும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டதாக சொன்னார். மேலும் தான் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தான் எதை பற்றியும் பயப்படவில்லை. தான் தைரியமாக போராடுவதாக கூறியிருந்தார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் இவருக்கு ரூ.5 லட்சம் தமிழக அரசு நிதி உதவி அளித்தது.
இந்த நிலையில்தான், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், எந்த விளம்பரமும் இன்றி தனக்கு உதவி செய்து இருப்பதாக உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். ஷிஹான் ஹூசைனி வீடியோவில் கூறியிருப்பதாவது:- " தமிழக அரசு எனது மருத்துவ செலவுகளுக்காக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. அரசு அளித்த நிதி உதவியை தாண்டி இரண்டு விஷயங்கள் எனது மனதை தொட்டுவிட்டது.

நேற்று 5 லட்சம் அளிக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிவிப்பு வெளியானது. ஆனால் உண்மையில், செவ்வாய்க்கிழமையே இந்த நிதி உதவி ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அளிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் எவ்வளவு அற்புதமான மனிதர் என்பதை இது காட்டுகிறது. ஊடகங்களை இதை வெளியிட சொல்லி எங்கும் நீங்கள் கேட்கவில்லை. இறக்கும் நிலையில் உள்ள ஒரு மனிதனின் தேவையை, மலிவான அரசியல் விளம்பரத்திற்காக ஒருபோதும் நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை.
இதற்காக உங்களை நான் வணங்குகிறேன். இரண்டாவதாக நீங்கள் விளையாட்டு திறமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த விருதை நீங்கள் பெற்றுள்ளீர்கள்" என்று கூறினார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஷிஹான் ஹூசைனியை வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானது.
வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹுசைனியை பாஜக நிர்வாகி கோபிநாத் தனது சக நிர்வாகிகளுடன் அண்மையில் சந்தித்தார். மேலும் அங்கிருந்தபடியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வீடியோ கால் போட்டு ஹுசைனியிடம் பேச வைத்தார். அப்போது அண்ணாமலை, "அண்ணே நான் உங்கள் சாதனைகளை பள்ளி, கல்லூரி காலத்திலிருந்தே பார்த்து வருகிறேன். உங்களுக்கு நிறைய துணிச்சல் இருக்கிறது. இன்ஸ்டாவில் நீங்கள் கித்தார் வாசித்ததையும் நான் பார்த்தேன்.

மனதை விட்டுவிடாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள். நீங்கள் பூரண நலம் பெற வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்தார். அதற்கு ஹுசைனி, "என்னை போன்ற ஒரு சாதாரண குடிமகனின் இன்ஸ்டா பக்கத்தை நீங்கள் பார்ப்பது எனக்கு சந்தோஷம். நான் தைரியமாக இருக்கிறேன். வீரர்களுக்கு சாவெல்லாம் ஒரு விஷயமே இல்லை" என்று கூறியிருந்தார்.
பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications