Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தகர்ந்த விதி.. தமிழக அரசின் புதிய தனியார் பல்கலைக்கழகச் சட்டம்.. ஏற்பட போகும் மிகப்பெரிய தாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பது இனி எளிது.. ஏனெனில் தற்போதைய நிலையில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்றால் 100 ஏக்கர் நிலம் வேண்டும். ஆனால் சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் வெறும் 25 ஏக்கர் இருந்தாலே ஆரம்பிக்கலாம் என்கிற முடிவுக்கு அரசு வந்துள்ளது. நகராட்சி என்றால் 35 ஏக்கரும், கிராமங்கள் என்றால் 50 ஏக்கர் நிலம் போதும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் பற்றியும், இதனால் ஏற்பட போகும் தாக்கம் பற்றி பார்ப்போம்..

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனையில் தளர்வை கொண்டு வருவதற்கான சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிமுகம் செய்தார். அதில் உள்ள தகவல்களை அப்படியே பார்ப்போம்.. :2019-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், தற்போது உள்ள கல்வி நிறுவனங்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல், புதிதாக தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவ நிர்ப்பந்தம் செய்கிறது.

TN Eases Private University Land Rules 25-Acre Norm to Drive Massive Impact on Higher Education

100 ஏக்கர் இனி தேவையில்லை

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு 100 ஏக்கர் தொடர் நிலம் தேவைப்படுகிறது. மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அந்தப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது.

சட்ட திருத்தம்

எனவே பக்கத்து மாநிலங்களுக்கான தனியார் பல்கலைக்கழக சட்டங்களில் உள்ளது போல், இங்கும் நிலத்தின் தேவை குறைக்கப்பட்டால், தகுதியான மற்றும் உரிய கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியும். எனவே, மாணவர்களின் நலனுக்காகவும், உயர் கல்வியை மேம்படுத்தவும், மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான கொள்கை நெறிகளை எளிமைப்படுத்தவும் சட்டத்தைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

25 ஏக்கர் போதும்

அதன்படி, தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம், மாநகராட்சி எல்லைக்குள் இருந்தால் அது 25 ஏக்கருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதுபோன்ற நிலம், நகராட்சி அல்லது பேரூராட்சி பரப்பிடத்திற்குள் இருந்தால் 35 ஏக்கருக்கு குறையாமல் இருக்க வேண்டும். வேறு இடங்களில் இருந்தால் 50 ஏக்கருக்கு குறையாமல் தொடர்ச்சி நிலமாக இருக்க வேண்டும்.

பணி நிபந்தனைகள்

ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகத்திலும் ஒதுக்கப்பட்ட அரசு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இடஒதுக்கீடு விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும். கல்லூரி நிலையில் இருந்து பல்கலைக்கழகமாக மாறும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அங்குள்ள அனுமதிக்கப்பட்ட அரசுப் பணியிடங்களில் உள்ளவர்களுக்கான பணி நிபந்தனைகளை குறைக்கக்கூடாது. அதுபோல் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் அந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும், பல்கலைக்கழக தேர்வு எழுதி படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயரும்

மாநகரங்களில் தனியார் பல்லைக்கழகங்கள் ஆரம்பிக்க 100 ஏக்கர் நிலம் தேவை என்பது வெறும் 25 ஏக்கர் என குறைவதால், நிலத்தின் விலை அதிகமாக உள்ள சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவது எளிதாகும். இதனால், மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

அதிக முதலீடுகள்

பெரிய அளவிலான நிலம் தேவையில்லை என்பதால், இந்திய மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய முன் வர வாய்ப்பு உள்ளது. இதனால் புதிய, சர்வதேச தரத்திலான நிறுவனங்கள் தமிழகத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

தரமான கல்விக்கு சவால்

நிலத்தின் தேவை குறைவது, பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானங்கள், கூடுதல் ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் வளாக வசதிகள் போன்ற கல்விக்கான அத்தியாவசிய அடிப்படைக் கட்டமைப்பின் தரத்தைக் குறைக்குமோ என்ற அச்சமும் இருக்கிறது. இருப்பினும், அரசு இந்த நிறுவனங்களுக்கு வலுவான கல்வி மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை அரசு கடுமையாக விதிக்கும் பட்சத்தில் தரத்தைப் பாதுகாக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் கட்டண உயர்வு அச்சமும் இருக்கிறது. அதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

கிராமப்புறங்களில் நிலத்தின் தேவை குறையும்

முன்னர் 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதால், பல நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிலம் வாங்கி பல்கலைக்கழகங்களைத் தொடங்கினார்கள். புதிய சட்டத்தால், நகரங்களுக்கு அருகிலேயே பல்கலைக்கழகங்கள் வருவதால், கிராமப்புற விவசாயிகள் நிலங்களை விற்க வேண்டிய அவசியம் ஏற்படாது.


வேலைவாய்ப்பு பெருகும்

தனியார்கள் புதிய புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படுவதால், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் பிற அலுவலகப் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது சாத்தியமானால் தமிழகத்தில் படித்தவர்கள் பலர் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கை

தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவதற்கு அரசு அனுமதி அளிக்கும்போது, அரசு நிர்ணயிக்கும் சில இடங்களை (உதாரணமாக, சிறுபான்மையினர் அல்லாத பல்கலைக்கழகங்கள் 65% இடங்கள் வரை) அரசுக்கு ஒதுக்க வேண்டிய சட்ட விதிமுறைகளும் உள்ளன . இந்தச் சட்டத் திருத்தம் மூலம் உருவாகும் புதிய நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். எனவே இடஒதுக்கீடும் கண்டிப்பாக வரும்.

உயர்கல்வியில் போட்டி அதிகரிக்கும்

அதிக எண்ணிக்கையிலான தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும்போது, கல்வித் தரத்திலும், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும் நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியைத் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+