"ஆதரவு தரலைனா கட்சி காலி?" விஜய்க்கு மற்ற கட்சிகள் தேடி சென்று ஆதரவு தருவது ஏன் தெரியுமா?
சென்னை: தவெகவுக்கு பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், பல்வேறு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விஜய்யை ஆதரிக்க அரசியல் கட்சிகள் ரெடியாக இருக்க என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடு தேர்தலில் விஜய் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இன்னும் 10 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. கூடுதல் எம்எல்ஏக்களை சேர்க்க விஜய் சிரமப்படுவார் என்று எதிர்பார்த்தால் அதற்கு நேர்மாறான ஒரு சூழலே இருக்கிறது.

கட்சிகள்
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துவிட்டது. இடதுசாரிகள், விசிக வரும் நாட்களில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளது. இதையெல்லாம் விட மிகப் பெரிய சர்ப்ரைஸ் என்றால் அதிமுக தான். அதாவது தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகவிலும் தீவிர ஆலோசனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பல்வேறு கட்சிகளும் தவெகவை ஆதரிக்க முன்வந்துள்ளது. தவெகவை ஆதரிக்க மற்ற கட்சிகள் காட்டும் ஆர்வம் என்பது கொள்கை சார்ந்தது மட்டுமல்ல, அது அந்தந்தக் கட்சிகளின் 'இருப்பு' சார்ந்த ஒரு விஷயமாகும்.
காங்கிரஸ்
முதலில் காங்கிரஸை எடுத்துக் கொள்வோம். 1967ம் ஆண்டிற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தொடாத காங்கிரஸ், கடந்த 60 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் நிழலிலேயே இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் காங்கிரஸின் பலம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் காங்கிரஸால் வளர முடியவில்லை.
சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் திராவிட கட்சிகளிடம் சீட் வாங்கியே போட்டியிட்டது. கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதே காங்கிரஸுக்கு பெரிய சிக்கலாக இருந்தது. இந்த நிலையை உடைத்து, ஒரு மூன்றாவது சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விஜய்யை ஒரு ஏணியாகப் பார்க்கிறது காங்கிரஸ்.
அதிமுக
அடுத்து அதிமுக.. 2021ல் ஆட்சியை இழந்த அதிமுக, 2026 தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்போது ஆட்சிக்கு வராவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக 2031 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.. அது தொண்டர்கள் மற்றும் கட்சியின் செல்வாக்கை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் என அதிமுக அஞ்சுகிறது. 2014க்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெல்லாத நிலையில், அக்கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது. இதனால் தான் அதிகாரத்திற்கு வர அதிமுக துடிக்கிறது.
கெஜ்ரிவால்
மேலும், கடந்த 2013ல் டெல்லியில் நடந்த விஷயங்களும் அரசியல் கட்சிகளை யோசிக்க வைக்கிறது. 2013 டெல்லி தேர்தலில் 28 இடங்களைப் பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் காங்கிரஸ் ஆதரவு தந்தது, ஆனால் 49 நாட்களில் அவர் ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்குப் பிறகு 2015ல் நடந்த தேர்தலில் கெஜ்ரிவால் 67 இடங்களுடன் இமாலய வெற்றி பெற்றார்; அதன் பிறகு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மற்ற கட்சிகள் அங்கு தேவையற்றதாகிவிட்டன. அதேபோல இங்கும் நடந்துவிடுமோ என மற்ற கட்சிகள் அஞ்சுகிறார்கள்.
அதாவது இப்போது விஜய்க்கு ஆதரவு தராமல் தேர்தல் மீண்டும் நடந்தால், அவர் மிக பெரிய மெஜாரிட்டியுடன் மீண்டும் வென்று வந்துவிட்டால்.. மற்ற கட்சிகளின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சமே இப்போதைய ஆதரவு முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது.
இதுதான் காரணம்
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் விஜய்யை ஆதரிப்பது என்பது தங்கள் இருப்பை உறுதி செய்யவே தவிர ஆப்ஷன் இல்லை. 7.5 கோடி மக்களை ஆளும் நிர்வாகத் திறமை விஜய்க்கு இருக்கிறதா என்பதைத் தாண்டி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் என்பதே மற்ற கட்சிகளின் ஒரே குறியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications