சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடக்கும் நிலையில், பொன்முடி ஏற்கனவே விருப்ப மனு அளிக்கவில்லை. இருப்பினும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட பொன்முடி மகன் கவுதம சிகாமணி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அடையாளமாக இருந்த பொன்முடி, 2011 சட்டசபைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியிலேயே சிவி சண்முகத்திடம் தோல்வி அடைந்தார். இதன்பின் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட தொடங்கினார். 8 முறை எம்எல்ஏ-வாக இருந்த பொன்முடி, இம்முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கூட அளிக்கவில்லை.

கடந்த ஆண்டு சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பொன்முடி பதவியை பறி கொடுத்தார். இதன்பின் திமுகவில் பொறுப்பு அளிக்கப்பட்டாலும், அமைச்சர் பதவி இல்லாததால், பொன்முடி பல்வேறு விவகாரங்களில் ஒதுங்கியே இருந்தார். அதேபோல் தனது மகனுக்கு சீட் பெற்றுக் கொடுக்கும் முடிவுக்கு பொன்முடி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற கணக்கில் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் கவுதம சிகாமணிக்கு சீட் கேட்டிருக்கிறார் பொன்முடி. ஆனால் இரு தொகுதிகளிலும் திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்களின் தொகுதியை மாற்றினால் சிக்கல் உருவாகும் என்று பென் டீம் தரப்பு எச்சரித்துள்ளது.
இதனால் முதல்வர் ஸ்டாலினும் அந்த தொகுதிகளை கொடுக்க முடியாது என்று கூறியதால், மகனுக்காக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறாராம் பொன்முடி. இதனால் திருக்கோவிலூர் தொகுதியில் விருப்ப மனு கூட பொன்முடி அளிக்கவில்லை. ஆனால் திருக்கோவிலூர் தொகுதிக்காக கவுதம சிகாமணி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள கவுதம சிகாமணி, திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட பொன்முடி விருப்ப மனு அளிக்கவில்லை என்று உறுதி செய்துள்ளார். இதே போல் துரைமுருகனும் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications