7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்!
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே வைகோவிடம் கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் மதிமுக தரப்பில் 7 தொகுதிகள் கேட்கப்பட்ட சூழலில், திமுக தரப்பில் 5 தொகுதிகள் மட்டும்தான் என்று கூறியதால், துரை வைகோ கடுமையான அதிருப்தியில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தரப்பில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் அத்தனை கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டை முடிக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதால், அறிவாலய சீனியர்கள் பரபரப்பாகி இருக்கின்றனர்.

இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தேர்தல் பணிகளை முடுக்கிவிட திமுக தயாராகிவிட்டது. இந்த நிலையில் மதிமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 4ல் வென்றது. ஆனால் லோக்சபா தேர்தலில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால் சட்டசபைத் தேர்தலிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதி மதிமுகவும், துரை வைகோவும் தீவிரமாக உள்ளனர். அதேபோல் மதிமுகவுக்கான மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்பதிலும் குறியாக உள்ளனர். இதற்கான திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் 12 தொகுதிகள் வேண்டும் என்று மதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியதோடு, தனிச்சின்னத்தில் போட்டி என்று கூறி இருக்கின்றனர்.
இதனால் திமுக சீனியர்கள் ஜெர்க்காகி இருக்கின்றனர். அப்போது எந்த உடன்பாடும் எட்டப்படாத சூழலில், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு நடத்தினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வைகோவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே வைகோவிடம் வேண்டுகோள் வைத்திருப்பதால், என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மதிமுக முழித்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாநில அந்தஸ்துக்காக 7 தொகுதிகள் தேவை என்று மதிமுக கூறி இருக்கிறது. அதற்கு தொகுதி பங்கீட்டு குழு தரப்பில் 5 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று தெளிவாக கூறி இருக்கின்றனர்.
இதனால் துரை வைகோ கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். இப்படியான சூழலில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடரலாமா மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications