இலவச லேப்டாப் திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம்? பரவும் தகவல் போலியானது - தமிழக அரசு விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த தகவலின் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வெளியான தகவலில், "தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025 விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும், சொந்தமாக - மடிக்கணினி வாங்க முடியாத, ஆனால் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த மடிக்கணினி தேவைப்படும் நபர்களுக்கு திறந்திருக்கும்.
விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர். காலக்கெடு:11/22/2025" என்று கூறப்பட்டிருந்தது. மேலும், பதிவு செய்வதற்கான லிங்க் ஒன்றும் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இணையத்தில் வெளியான இந்த தகவல் உண்மையில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு ரூ. 2,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரபல நிறுவனங்களில் லேப்டாப்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
மாணவர்களுக்கு லேப்டாப்கள் விரைவில் விநியோகம் செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கல்வி ஆண்டில் முதற்கட்டமாக கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், அரசு வேளாண் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வழங்க உள்ள விலையில்லா லேப்டாப் திட்டத்திற்கு தனியாக விண்ணப்பிக்க எந்த அறிவுறுத்தலும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை. கல்லூரி நிர்வாகங்கள் வாயிலாகவே மாணவர்களுக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications