வாட்ஸ் அப் பதிவால் கொதித்து போன ஸ்டாலின்.. முன்னாள் டிஜிபி நடராஜ்க்கு சிக்கல்? விரைவில் கைதாகிறார்?
சென்னை: உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது ஓய்வு பெற்ற டிஜிபி நடராஜை தான் என பிரபல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் அப்படி என்ன பதிவிட்டார் என்பதையும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த திருமங்கலம் கோபால் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பேசும் போது, " ஒரு போலீஸ் அதிகாரி, பெயர் சொல்ல விரும்பவில்லை, அவர் தனது official whatsapp-இல் ஒரு செய்தியைப் போட்டு இருக்கிறார். அது என்ன செய்தி என்றால், இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை, இந்துக்களின் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்துவிடவில்லை என நான் கூறியதாக என் பெயரை போட்டு வாட்ஸ் அப்பில் பொய்யாக போட்டுள்ளார். அந்த ஓய்வு பெற்ற உயர் காவல் அதிகாரி மீது வழக்கு போட்டு இருக்கிறோம். பத்திரிகையில் இன்றைக்கு வரும் நீங்கள் பாருங்கள்.
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் எல்லாம் பயன்படுத்தவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் விழாவில் பேசும் போது குறிப்பிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி யார் என்றால், ஓய்வு பெற்ற டிஜிபி நடராஜ் என்கின்றன சமூக ஊடகங்கள். அவர் வெளியிட்டதாக வாட்ஸ் அப் பதிவு ஒன்றையும் பல சமூக ஊடகங்களும், பிரபல தமிழ் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. பிரபல செய்தி சேனலின் பெயரில் உள்ள போலி கார்டில், இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை, இந்துக்களின் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்தவிடவில்லை என ஸ்டாலின் கூறுவது போல் பொய்யான செய்தி இருக்கிறது.
வழக்கமாக இதுபோன்ற வாட்ஸ் அப் பதிவுகள், போலி கார்டுகளை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனெனில் பார்த்த உடனேயே இதுபோலி என்பதை பலரும் கண்டுபிடித்துவிடுவார்கள்.ஏனெனில் குறிப்பிட்ட வாட்ஸ் அப் கார்டு பல நாட்களாக சமூக ஊடங்களில் சுற்றி வரும் போலி செய்தி என்பதால் எளிதாக அறிய முடியும். ஆனால் மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக டிஜிபியுமான நட்ராஜ் PDP என்கிற ஒரு WhatsApp க்ரூப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து கொதித்து போன முதல்வர் ஸ்டாலின் உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத்தான் ஊடகங்கள் செய்திகளாகவும் வெளியிட்டுள்ளன.
இதனிடையே முன்னாள் டிஜிபி நடராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இடிக்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரப்பிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை முன்னாள் டிஜிபி நடராஜ் விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் அளித்தால் தான் முழுமையான விவரம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications